சென்னை: 2026 ஐபிஎல் ஏலத்திற்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் ஒரு புதிய அதிரடி வீரர் நுழையப் போகிறாரா என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது. இதற்குக் காரணம், இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவின் ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் லைக்'. இந்தச் சிறிய செயல், சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
சமீபத்தில், பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகரின் கமெண்ட்டை லைக்' செய்துள்ளார். அந்தக் கமெண்ட்டில், "ருதுராஜ் கெய்க்வாட், மகாராஷ்டிரா அணியில் ஆடி வரும் பிரித்வி ஷாவை சிஎஸ்கே நிர்வாகத்திற்குப் பரிந்துரைப்பார் என்று நம்புகிறேன். அவர் 3-ம் வரிசையில் ஆட சம்மதித்தால், ஆயுஷ் மத்ரே - பிரித்வி ஷா தொடக்கக் கூட்டணி, மெக்கல்லம் - ஸ்மித் காலத்து அதிரடியை மீண்டும் கொண்டு வரும். 6 ஓவர்களில் 100 ரன்கள் என்ற அந்த நாட்கள் மீண்டும் வர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சிஎஸ்கே-வின் எதிர்காலத் திட்டத்தோடு தொடர்புடைய இந்தக் கமெண்ட்டை பிரித்வி ஷா லைக் செய்திருப்பது, அவர் சென்னை அணிக்கு வர விரும்புகிறார் என்பதற்கான மறைமுக சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.
2025 ஐபிஎல் சீசன், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு கெட்ட கனவாக அமைந்தது. 14 போட்டிகளில் வெறும் 4-ல் மட்டுமே வென்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது சிஎஸ்கே. அந்த அணியின் மிகப்பெரிய பலவீனமாக பேட்டிங், குறிப்பாகத் தொடக்கக் கூட்டணி அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தது, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே போன்ற வீரர்கள் சொதப்பியது என சிஎஸ்கே-வின் தொடக்கம் படுமோசமாக இருந்தது.
பவர்-பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி, ரன் குவிக்கக்கூடிய ஒரு திறமையான தொடக்க வீரர் சிஎஸ்கே-வுக்கு அவசியமாகத் தேவைப்படுகிறார். பிரித்வி ஷாவின் ஆக்ரோஷமான ஆட்டம், இந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்யும் என்று நம்பப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்ட பிரித்வி ஷா, தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் சறுக்கலைச் சந்தித்துள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டு, 2025 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போனார். மேலும், மும்பை உள்ளூர் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
தற்போது, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா உள்ளூர் அணியில் பிரித்வி ஷா இணைந்துள்ளது, இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. ருதுராஜ் மூலம் சிஎஸ்கே அணிக்குள் நுழைய அவர் திட்டமிடுகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு லைக்' மூலம் தொடங்கிய இந்தச் செய்தி, உண்மையிலேயே நடைமுறைக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், தடுமாறி வரும் சிஎஸ்கே அணிக்கு, தன்னை மீண்டும் நிரூபிக்கத் துடிக்கும் பிரித்வி ஷாவின் வருகை ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.