லண்டன்: கடந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு மோசமான சீசனாக அமைந்தது. ஐபிஎல் மட்டுமல்லாமல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பிரித்வி ஷாவால் சீராக ரன்கள் சேர்க்க முடியவில்லை. 140 கி.மீ வேகத்தில் கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும் பிட்சில் பந்துவீசப்பட்டால், எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
பிரித்வி ஷாவின் உயரம் அவருக்கு பிரச்சனையாக மாறியது. இதனை பயன்படுத்தி பந்துவீச்சாளர்கள் அவரை அச்சுறுத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேயும் பிரித்வி ஷா ஏராளமான சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் இந்திய அணியில் பிரித்வி ஷா கம்பேக் கொடுக்க வாய்ப்பே இல்லை என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தியோதர் டிராபியில் விளையாட பிரித்வி ஷா தேர்வு செய்யப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் கவுண்டி அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட போவதாக அறிவித்தார். இதற்காக ஜூலை மாதம் 19ஆம் தேதியே இங்கிலாந்து புறப்பட்டுப் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக பிரித்வி ஷா அறிமுகமான முதல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து மண்ணிலும் பிரித்வி ஷாவின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருவதாக ரசிகர்களிடையே கருத்துகள் எழுந்தன. இந்த நிலையில் சோமர்செட் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பிரித்வி ஷா ருத்ர தாண்டவம் ஆடினார். 53 பந்துகளில் சதம் விளாசிய பிரித்வி ஷா, அடுத்தடுத்து இரட்டை சதத்தை விளாசி வெறித்தன இன்னிங்ஸை ஆடினார்.
தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா, 49.3 ஓவரில் ஆட்டமிழந்தார். மொத்தமாக 153 பந்துகளை எதிர்கொண்ட பிரித்வி ஷா 11 சிக்சர்கள், 28 பவுண்டரிகள் உட்பட 244 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
அதேபோல் இந்திய சார்பாக முதல்தர கிரிக்கெட்டில் அந்நிய மண்ணில் அதிக ரன்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக ஷிகர் தவான் 248 ரன்கள் விளாசியதே சாதனையாக உள்ளது. பிரித்வி ஷாவின் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.