வீரர்களுக்கு காயம்
இந்திய அணி வெற்றி பெறுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில் தான் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதே போல இந்திய அணிக்கு முதல் தர பயிற்சிகள் வழங்குவதற்காக கவுண்டி அணிகளுடன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியின் போது, வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயமடைந்தனர். இதனால் இந்த 3 வீரர்களும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
பிசிசிஐ அறிவிப்பு
இந்நிலையில் இந்த 3 வீரர்களுக்கு மாற்றாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை இங்கிலாந்து டெஸ்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது பிசிசிஐ. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருமே தற்போது இலங்கை தொடரில் பங்கேற்றுள்ளனர். 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடர் முடிவடைந்துவிட்டதால் அவர்களின் போட்டி தேதிகளில் எந்த சிக்கலும் இல்லை.
சிக்கல்கள்
ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அவர்களின் பயணத்தை தடை செய்ய வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இலங்கை தொடரின் போது, இந்திய வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்திய அணியில் 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரும் அடங்குவர்.
முடிவுகள்
இங்கிலாந்துக்கு விமானம் ஏற வேண்டும் என்றால், இரு வீரர்களுக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு மூன்றிலுமே நெகட்டிவ் என முடிவுகள் வர வேண்டும். எனவே இன்னும் 3 நாட்களுக்குள் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா இருவருக்கும் பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துவிடுமா என்பது சந்தேகமே.