மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, நடிகையும், சமூக வலைதள பிரபலமுமான ஆக்ரிதி அகர்வாலுடன் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, அவர்களது காதல் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, ஆக்ரிதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரித்வி ஷாவுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், "உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கணபதி பாப்பா மோர்யா" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படத்தில் இருவரும் பாரம்பரிய உடையில் காட்சியளிக்கின்றனர். இந்தப் புகைப்படம் வெளியானதிலிருந்து, இருவருக்கும் இடையேயான உறவு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். பிரித்வி ஷா சமீபத்தில் புச்சி பாபு தொடரில் சதம் அடித்து இருந்தார்.
ஆக்ரிதி அகர்வால், லக்னோவில் பிறந்து மும்பையில் படித்தவர். ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் உள்ளடக்க உருவாக்குநராக (content creator) தனது பயணத்தைத் தொடங்கிய இவர், தற்போது நடிகையாகவும் வலம் வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 3.3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். சமீபத்தில் வெளியான 'திரிமுகா' என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். இவருக்குச் சொந்தமாக யூடியூப் சேனலும் உள்ளது.
பிரித்வி ஷாவும், ஆக்ரிதியும் இதற்கு முன்பும் பலமுறை மும்பையில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 2025-ல், இந்தோனேசியாவின் நுசா பெனிடா தீவில் பிரித்வி ஷா வெளியிட்ட புகைப்படங்களுக்குக் கீழே, ஆக்ரிதி "எனது அழகான காட்சி" (My perfect view) என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பிரித்வி ஷா பதிலளித்தது, சமூக வலைதளங்களில் அவர்களது உறவு குறித்த பேச்சுகளைத் தொடங்கி வைத்துள்ளது. தற்போது விநாயகர் சதுர்த்தியை இருவரும் சேர்ந்து கொண்டாடியுள்ளது, இந்த வதந்திகளை உறுதி செய்வது போல் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சச்சின் என்று வர்ணிக்கப்பட்ட பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கை சமீப காலமாக மோசமாக காணப்படுகிறது. கடந்த 2024 நவம்பரில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில், எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை.
இதனால் 2018 முதல் 2024 வரை ஏழு ஆண்டுகள் அங்கம் வகித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறிய அவர், 2025 ஐபிஎல் தொடர் முழுவதையும் வெளியிலிருந்து பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், மும்பை அணியிலிருந்து விலகி மகாராஷ்டிரா அணிக்காக விளையாடத் தொடங்கியுள்ளார். தனது புதிய அணிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே புச்சி பாபு டிராபியில் சதமடித்து, மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.