விசாகப்பட்டினம்: புரோ கபடி லீக் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனில் தமிழ் தலைவாஸ் அணி 2வது தோல்வியை தழுவியது. இதன் மூலம் குஜராத் ஜெயின்ட்ஸ் இறுதியாக PKL 2025-ல் தனது புள்ளி கணக்கை தொடங்கியது. சனிக்கிழமை இரவு நடந்த பரபரப்பான போட்டியில் தமிழ் தலைவாஸை 37-28 என்ற கணக்கில் தோற்கடித்து குஜராத் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், குஜராத் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தி, நிதின் மற்றும் ராகேஷின் நிலையான ஆட்டத்தின் மூலம் தனது முன்னிலையைத் தக்கவைத்து சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.போட்டி ஆரம்பத்தில் இரு அணிகளும் புள்ளிக்குப் புள்ளி பெற்றதால், பரபரப்பு தொற்றி கொண்டது.

ஆனால் குஜராத் மெதுவாக முன்னேறி, இடைவேளையில் 18-12 என்று முன்னிலை பெற்றது. நிதின் மற்றும் ராகேஷ் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்த, அணியின் தற்காப்பு நட்சத்திரம் முகமத்ரேசா ஷாட்லூய் சில முக்கியமான தடுப்புகளைச் செய்து தலைவாஸை கட்டுப்படுத்தினார்.தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் செஹ்ராவத் தலைமையில் இரண்டாவது பாதியில் மீண்டு வர முயற்சித்தது.
பவன் முக்கியமான ரெய்டு புள்ளிகளைப் பெற்று ஒரு கட்டத்தில் விளையாட்டை மூன்று புள்ளிகள் வித்தியாசத்திற்கு கொண்டு வந்தார். இருப்பினும், குஜராத்தின் ரெய்டர்கள் அமைதியாகவும் துல்லியமாகவும் பதிலளித்து, இறுதி நிமிடங்களில் மீண்டும் முன்னிலை பெற்றனர். இறுதியாக ஒரு பெரிய முன்னேற்றத்துடன், அவர்கள் தங்கள் முன்னிலையை ஒன்பது புள்ளிகளாக உயர்த்தினர்.
37-28 என்று போட்டி குஜராத்துக்கு சாதமாக முடித்தனர். இந்த வெற்றியின் மூலம், குஜராத் ஜெயின்ட்ஸ் தனது தோல்வி பயணத்தை உடைத்து, மிகவும் தேவையான உத்வேகத்தைப் பெற்றது. அதே சமயம் தலைவாஸ் அணி சீசனின் ஆரம்ப கட்டங்களில் கடந்த காலத்தை போல் தடுமாறுகிறது. தமிழ் தலைவாஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வியை தழுவியுள்ளனர்.