சென்னை : 2023 - 2024 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் நிலையில், பெங்களுரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு நிமிடங்கள் இருந்த போது சம அளவில் புள்ளிகளை பெற்றது.
நீண்ட நாட்களுக்கு பின் தமிழ் தலைவாஸ் வெற்றி பெறப் போகிறது என ரசிகர்கள் நினைத்த போது பெங்களுரு புல்ஸ் அணி அடுத்த நான்கு நிமிடங்களும் 1 புள்ளி முன்னிலை என்ற அளவிலேயே போட்டியைக் கொண்டு சென்று கடைசி ரெய்டில் வெற்றி பெற்றது.

பெங்களுரு புல்ஸ் அணியின் அஜின்க்யா பவார் கடைசி நிமிடத்தில் ரெய்டு வந்து நேரத்தை போக்கினார். அந்த அணி அப்போது 1 புள்ளி முன்னிலையில் இருந்ததால் அவர் நேரத்தை கடத்தி வெற்றியை உறுதி செய்தார். அதனால், எதுவும் செய்ய முடியாமல் தவித்து தோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ் அணி.
இதை அடுத்து ஒன்பது போட்டிகளில் தன் ஏழாவது தோல்வியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ் அணி. தற்போது புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் உள்ளது. மொத்தம் 12 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரில் 11வது இடத்தில் இருப்பது படுமோசமான செயல்பாடு என்பதால் தமிழ் தலைவாஸ் அணி துவண்டு போயுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து தோற்றது மேலும் காயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
இந்த சீசனில் 50 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டியாகி விட்டது. ஆனாலும், தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் உள்ளது, இந்த முறை அந்த அணி பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது என்ற முடிவுக்கே வர வேண்டி உள்ளது.