மும்பை : புரோ கபடி லீக் தொடரில் யுபி யுத்தாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் பர்தீப் நார்வாலை எட்டு முறை தடுப்பாட்டம் மூலம் அவுட் செய்து கதற வைத்தது தமிழ் தலைவாஸ்.
மேலும், தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய ரெய்டர் நரேந்தர் சிறப்பாக செயல்பட்டு 14 புள்ளிகளை அள்ளினார். அதை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. அதுவும் பெரும் ஆதிக்கம் செலுத்தி 19 புள்ளிகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது. இதுவே இந்த சீசனில் அந்த அணியின் இரண்டாவது வெற்றி.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் எட்டாவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி, யுபி அணியை முதலில் ஆல் - அவுட் செய்தது. அப்போது ஸ்கோர் 2 - 11 என்ற அளவில் தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமாக இருந்தது. ஆனால், அதில் இருந்து போராடி முதல் பாதி நேர முடிவில் யுபி அணி 11 - 19 என்ற அளவுக்கு முன்னேறியது.
ஆனால், யுபி அணியின் நட்சத்திர ரெய்டர் பர்தீப் நார்வாலை புள்ளிகள் எடுக்க விடாமல் ஒவ்வொரு முறையும் குறி வைத்து டேக்கில் செய்து அவுட் செய்தது தமிழ் தலைவாஸ். அந்த வகையில் தமிழ் தலைவாஸ் அணியின் தடுப்பாட்டத்தை பாராட்டியே ஆக வேண்டும். மேலும், மூன்று முறை யுபி அணியை ஆல் - அவுட் செய்தது. ஆட்ட நேர முடிவில் 27 - 46 என்ற புள்ளிக் கணக்கில் 19 புள்ளிகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ்.
இந்த இரண்டாவது வெற்றி அந்த அணிக்கு ஊக்கம் அளித்தாலும் இன்னும் புள்ளிப் பட்டியலில் 11வது இடத்திலேயே தான் இருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. கடைசி இடமான 12 வது இடத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் அணி செல்ல வேண்டும் என்றால் லீக் சுற்றின் முடிவில் முதல் ஆறு இடங்களுக்குள் வர வேண்டும். இனி வரும் போட்டிகளில் எல்லாம் வென்றால் மட்டுமே அது சாத்தியமாகும்.