சென்னை : 10வது சீசன் புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியலில் இக்கட்டான நிலையில் உள்ளது தமிழ் தலைவாஸ் அணி. அடுத்த போட்டியில் பெங்களுரு புல்ஸ் அணிக்கு எதிராக ஆட உள்ள நிலையில் அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் பிளே - ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விடும்.
தற்போது புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி பத்தாவது இடத்தில் உள்ளது. பிளே - ஆஃப் செல்ல வேண்டும் என்றால் முதல் ஆறு இடங்களுக்குள் இடம் பெற வேண்டும். இன்னும் 9 போட்டிகளே தமிழ் தலைவாஸ் அணிக்கு மீதமுள்ளது. அதே சமயம் தற்போது புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடம் முதல் ஒன்பதாவது இடம் வரை இருக்கும் அணிகளை தமிழ் தலைவாஸ் அணி முந்த வேண்டும் என்றால் கூடுதலாக 15 புள்ளிகள் வேண்டும். அதாவது அந்த அணிகளை விட மூன்று வெற்றிகள் கூடுதலாக பெற்று இருக்க வேண்டும்.

அதற்கு தமிழ் தலைவாஸ் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அந்த நான்கு அணிகளும் கூட சில தோல்விகளையாவது சந்திக்க வேண்டும். குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக அந்த அணிகள் ஆடும் போட்டிகளில் தோல்வி அடைந்தால் மட்டுமே தமிழ் தலைவாஸ் வேகமாக புள்ளிப் பட்டியலில் முன்னேறும்.
அந்த வகையில் ஞாயிறு அன்று நடைபெற உள்ள போட்டியில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் பெங்களுரு புல்ஸ் (37 புள்ளிகள்) அணியை சந்திக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. இந்தப் போட்டியில் வென்றால் 5 புள்கள் பெற்று தமிழ் தலைவாஸ் அணி 30 புள்ளிகள் என்ற நிலைக்கு முன்னேறும். அப்போது கூட பெங்களுரு அணியை விட 7 புள்ளிகள் குறைவாகவே இருக்கும். ஆனாலும், இப்படி ஒவ்வொரு வெற்றியாக பெற்றால் தான் பிளே - ஆஃப் வாய்ப்பை பெற முடியும்.