சென்னை : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அதற்கு காரணம், முதல் 12 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற அந்த அணி அடுத்து நான்கு போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்தது. அதனால், பிளே-ஆஃப் வாய்ப்பை நோக்கி சென்றது.
ஆனால், கடைசியாக ஆடிய போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது தமிழ் தலைவாஸ். அதனால், பிளே-ஆஃப் வாய்ப்பு சற்று சிக்கலாக மாறி உள்ளது.

புரோ கபடி தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். ஒவ்வொரு அணியும் 22 லீக் போட்டிகளில் பங்கேற்கும். வெற்றி பெற்றால் 5 புள்ளிகளும், டை செய்தால் 3 புள்ளிகளும் கிடைக்கும். இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி 17 போட்டிகளின் முடிவில் 40 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
முதல் ஆறு இடங்களுக்குள் அந்த அணி இடம் பெற வேண்டும் என்றால் மீதமுள்ள ஐந்து போட்டிகளில் வென்றால் போதும். நிச்சயம் பிளே-ஆஃப் சென்று விடலாம். ஆனால், அது அத்தனை எளிதான காரியமில்லை. மாறாக ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட தமிழ் தலைவாஸ் அணியின் பிளே-ஆஃப் கனவு கிட்டதட்ட முடிவுக்கு வந்து விடும். காரணம் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஹரியானா (50 புள்ளிகள்) மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கும் குஜராத் (49 புள்ளிகள்) அணிகளுக்கு இன்னும் ஆறு போட்டிகள் மீதமுள்ளன. அந்த அணிகள் நான்கு வெற்றிகளை பெற்றால் கூட தமிழ் தலைவாஸ் அணியை எளிதில் முந்தி விட முடியும்.
தமிழ் தலைவாஸ் அணி அடுத்து குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை சந்திக்க உள்ளது. அந்தப் போட்டியில் வென்றால் புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஏழாம் இடத்தை பெற்று சற்று நம்பிக்கை பெறலாம். அதே சமயம், அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் கடைசி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று விட்டு பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு கிடைக்குமா? என மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பதற்றத்துடன் பார்த்துக் கொண்டு இருக்க நேரிடும்.