பாகிஸ்தான் வீரர்களை படகில் வந்த அகதிகள் என நினைத்து முற்றுகையிட்ட இங்கிலாந்து மக்கள்.. என்ன நடந்தது?
லண்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை, சட்டவிரோத அகதிகள் எனத் தவறாக நினைத்து குடியேற்ற எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் ஹோட்டலை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் நகரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
போர்ட்ஸ்மவுத் நகரின் கோஷாம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்தனர். அப்போது, ஆசிய இளைஞர்கள் பேருந்தில் வந்து இறங்குவதைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர், அவர்கள் படகுகள் மூலம் தஞ்சம் புகுந்த சட்டவிரோத அகதிகள் எனத் தவறாக நினைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதனையடுத்து, சுமார் 30 பேர் கொண்ட போராட்டக்காரர்கள் அந்த ஹோட்டலுக்கு வெளியே திரண்டு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஹாம்ப்ஷயர் காவல்துறையினரும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு வந்திருப்பது கிரிக்கெட் விளையாட வந்த பாகிஸ்தான் இளம் வீரர்கள் என்பதை விளக்கிய பிறகு, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பாகிஸ்தான் சீனியர் கிரிக்கெட் அணி தற்போது பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த சூழலில் இளம் வீரர்களுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிறிய படகுகள் மூலம் நுழைவது பெரும் அரசியல் விவாதமாக உள்ளது.
ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதைக் கண்டாலே சந்தேகக் கண்ணோடு பார்த்து அச்சுறுத்துவது நிறவெறியின் வெளிப்பாடு என்றும், இது எதிர்காலத்தில் வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும் இனவெறி எதிர்ப்பு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே சீனியர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்க்ஸில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.


Click it and Unblock the Notifications

