யாருக்கு கிடைக்கும்? எனக்கு கிடைச்சிருக்கே.. உருகி, உருகி பேசும் இஷாந்த் சர்மா... ஏன் தெரியுமா?
டெல்லி: ஐபிஎல் சீசனில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தான் சொந்த மைதான அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று இஷாந்த் சர்மா நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இஷாந்த் சர்மா. டெல்லியைச் சேர்ந்த அவர் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் விளையாடியவர்.
ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி உள்ளார். ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பிலும் விளையாடி இருக்கிறார்.

முதல் முறையாக ஆட்டம்
தற்போது அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் விளையாடியவர். தற்போது, தமக்கு சொந்தமான அணியில் முதன்முறையாக விளையாட இருப்பதை இஷாந்த் சர்மா ஆவலாக எதிர்பார்த்து உள்ளார்.

17 வயதில் விளையாட்டு
இதுகுறித்து அவர் கூறியதாவது:மற்ற மைதானதங்களை விட பெரோஸ் ஷா கோட்லா மைதானம் சிறப்பு வாய்ந்தது. 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இருந்தே இங்கேதான் விளையாடி வருகிறேன்.

மலரும் நினைவுகள்
என்னுடைய எல்லா போட்டிகளிலும் இங்கேதான் விளையாடியுள்ளேன். எனக்கு இப்போது பழைய நினைவுகள் வந்து செல்கின்றன. எனக்கு மட்டுமல்ல, டெல்லியில் இருந்து கிரிக்கெட் வீரர்களாக வந்துள்ள அனைவருக்கும், பெரோஸ் ஷா கோட்லா மைதானம் குறித்த நினைவுகள் இருக்கும்.

கிரிக்கெட் வாழ்க்கை
ஏனென்றால், எல்லோரும் இங்கிருந்துதான் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியிருப்பார்கள். இங்கிருந்துதான் நாங்கள் இந்திய அணிக்கு விளையாட சென்றோம்.

சாம்பியன் பட்டம்
12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மைதானத்திற்குரிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு கவுரவம். சிறந்த முறையில் பந்து வீசுவேன். நிச்சயமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications