கொரோனாவுக்கு இடையே..
உலகில் பல கிரிக்கெட் தொடர்கள் கொரோனா பாதிப்பால் தடைபட்டுள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - நியூசிலாந்து, இங்கிலாந்து - இலங்கை என பல முன்னணி அணிகளின் சர்வதேச தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் மாற்றம்
இந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் பாதி முடிந்த நிலையில், கொரோனாவுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இந்த நிலையில், போட்டிகளை அடுத்தடுத்த நாட்களில், இரண்டு இரண்டு போட்டிகளாக நடத்தி முடிக்கவும், ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடத்தவும் முடிவு செய்தது பாகிஸ்தான் சூப்பர் லீக் நிர்வாகம். அதனால், மார்ச் 22 அன்று முடிய வேண்டிய தொடர் 18ஆம் தேதியே முடிய உள்ளது. ரசிகர்கள் இல்லாத அரங்கில் தான் கிறிஸ் லின் அதிரடி ஆட்டம் ஆடினார்.
முல்தான் அணி பேட்டிங்
இந்த தொடரில் 29வது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதின. முல்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு மொயீன் அலி 1, ஷீஷன் 2 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி துவக்கம் அளித்தனர்.
குஷ்தில் ஷா அதிரடி
ஷான் மசூத் 29 பந்துகளில் 42 ரன்களும், ரவி போபரா 33 ரன்களும் எடுத்தனர். குஷ்தில் ஷா 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்து மிரட்டினார். அவர் 6 சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். அசாத் ஷபிக் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
இமாலய இலக்கு
கடைசி நேரத்தில் ரோஹைல் 17 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். அது பெரிய அளவில் உதவ, முல்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 186 ரன்கள் குவித்தது. லாகூர் அணிக்கு 187 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது.
அதிரடி ஜோடி
அடுத்து ஆடத் துவங்கிய லாகூர் அணிக்கு ஃபாக்கர் ஜமான், கிறிஸ் லின் அதிரடி துவக்கம் அளித்தனர். ஜமான் 35 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். 7 ஃபோர்ம 2 சிக்ஸர் அடித்தார். லின்னும் அதிரடி ஆட்டம் ஆடினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.
லின் சதம்
கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தை தொடர, மறுபுறம் சோஹைல் அக்தர் நிதான ஆட்டம் ஆடினார். 52 பந்துகளில் சதம் கடந்த அவர், 55 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். கடைசி வரை அவர் ஆட்டமிழக்காமல் நின்றார்.
லாகூர் வெற்றி
லாகூர் அணி 18.5 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது. 187 ரன்கள் என்ற இமாலய இலக்கை எளிதாக சேஸிங் செய்து அசத்தியது. அதற்கு முழு காரணமும் கிறிஸ் லின் தான். மேலும், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது லாகூர் கலந்தர்ஸ்.
ஐபிஎல் புறக்கணிப்பு
இந்த தொடர் முழுவதும் கிறிஸ் லின் அதிரடி ஆட்டம் ஆடினார். மேலும், முக்கியமான இந்தப் போட்டியிலும் வென்று தன் அணியை அரையிறுதிக்கு முன்னேற வைத்தார். இவரை கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் முதலில் எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நொடியில் அவரது அடிப்படை விலையான 2 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் ஆடவில்லை
கிறிஸ் லின் தன் அணியை அரையிறுதிக்கு முன்னேற வைத்தாலும், கொரோனா வைரஸ் காரணமாக அவர் ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றார். அரையிறுதி மற்றும் இறுதி அடுத்த இரு நாட்களில் நடக்க இருக்கும் நிலையில், அவர் அதுவரை கூட காத்திருக்க விரும்பாமல் நாடு திரும்பினார்.