
அடுத்தடுத்து பாதிப்பு
பாகிஸ்தான் ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரில் திடீரென வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 போட்டிகள் மீதமுள்ளன.

அனுமதி மறுப்பு
இதனையடுத்து ஐபிஎல்-ஐ போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் ஜூன் 5ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் நடக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் மே 25ம் தேதி அபுதாபி புறப்பட தயாராக இருந்தனர். ஆனால், பல வீரர்களுக்கு விசா கிடைக்கவில்லை. அமீரகத்தில் தரையிறங்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஒளிபரப்பு குழுவுக்கு சிக்கல்
இந்த தாமதம் காரணமாக, தொடரை ஜூன் 5ம் தேதிக்கு பதிலாக ஜூன் 7ம் தேதி தொடங்க ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், இறுதிப்போட்டி ஜூன் 20ம் தேதிக்கு பதில், ஜூன் 24ம் தேதி தள்ளிவைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புது தலைவலியாக, பிஎஸ்எல் தொடரின் ஒளிபரப்புக் குழுவிற்கு இன்னமும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியர்களும் ஒளிபரப்பு குழுவில்
அபுதாபி சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்சிஇஎம்ஏ யுஏஇ) இன்னும் 16 உறுப்பினர்களைக் கொண்ட ஒளிபரப்புக் குழுவிற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த குழுவில் இந்தியர்கள் மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் இருக்கின்றனர். மே 28 அன்று அவர்கள் இங்கு வந்ததிலிருந்து அபுதாபியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அதிகாரி நம்பிக்கை
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், "ஏற்கனவே இத்தொடர் தாமதமாகிவிட்ட நிலையில், 16 பேர் கொண்ட ஒளிபரப்பு குழுவுக்கு அபுதாபி சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவில் அனுமதி வழங்கும் என்று நாங்கள் காத்திருக்கிறோம். அந்த குழுவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளனர்" என்றார்.


Click it and Unblock the Notifications











