டெல்லி: பாகிஸ்தானில் இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் தாக்குதலில் இருந்து உயிர் தப்பி இருக்கிறார்கள். இது தொடர்பான செய்தி ஆஸ்திரேலிய ஊடகங்கள் மத்தியில் பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இது பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக உள்ளது.
2025 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானில் முகாமிட்டு இருந்தனர். அவர்கள் கடந்த சில வாரங்களாக அங்கு டி20 போட்டிகளில் விளையாடி வந்தனர். இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் எழுந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு, மீதமிருந்த போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) முடிவு செய்தது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து விமானங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ விமானத் தளத்திலிருந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் துபாய்க்குச் சென்றனர்.
பாகிஸ்தானில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்திலிருந்து ஒரு தரப்பு கிரிக்கெட் வீரர்கள் குழு துபாய்க்குச் சென்றது. அதில் ஆஸ்திரேலிய வீரர்களான சீன் அபோட், பென் துவார்ஷியஸ், ஆஷ்டன் டர்னர், மிட்ச் ஓவன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள் தங்கள் உடைமைகளைப் பாகிஸ்தானிலேயே விட்டுவிட்டு, அவசர கதியில் துபாய்க்கு கிளம்பிச் சென்றிருக்கின்றனர். அவர்கள் அந்த விமானத் தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதற்குப் பிறகு, 20 நிமிடங்களில் அந்த விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு துபாய்க்குச் சென்றவுடன் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ஒருவேளை உடைமைகளை எடுத்துச் செல்வோம் என அவர்கள் பிடிவாதமாக இருந்திருந்தால், நிச்சயமாக தாமதம் ஏற்பட்டிருக்கும். அதுபோன்ற சூழ்நிலையில் அவர்கள் விமானத் தளத்தில் இருந்தபோது கூட தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம்.
இதை நினைத்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் உள்ளது. எனினும், ஆஸ்திரேலிய வீரர்கள் இனி பாகிஸ்தானுக்கு செல்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.