டெல்லி: இந்தியாவின் அதிரடி தாக்குதல்களால் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானில் பதற்ற நிலை நிலவுவதால், அங்கு நடந்து வரும் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்ந்து நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானை விட்டு செல்ல முடியாமல் வெளிநாட்டு வீரர்கள் சிக்கிக் கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் பஹல்காமில் தாக்குதல் நடந்ததை அடுத்து, இந்தியா அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற அதிரடி தாக்குதலை இந்தியா நடத்தியதை அடுத்து பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்று இருக்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற பதற்ற நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் இந்தியா நடத்திய டிரோன் தாக்குதலால் பாகிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் விமானங்கள் பறக்க தடை உள்ளது. அதனால் வெளிநாட்டு வீரர்கள் எளிதாக தங்கள் நாட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், தற்காலிகமாக பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) செய்தி தொடர்பாளர் அமீர் பேசுகையில், "இருதரப்பிலும் எல்லையில் தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. ஆனால் இது பாகிஸ்தான் சூப்பர் லீக் -ஐ பாதிக்காது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நிலைமை மேலும் மோசமானால், அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி நாங்கள் ஆலோசிப்போம்" என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்று உள்ள அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) அதிகாரிகள் அவசரக் கூட்டத்தைக் கூட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மே 18 வரை நடைபெற உள்ள நிலையில், அதுவரை அந்தத் தொடரை பாதுகாப்பாக நடத்த முடியுமா அல்லது தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாமா என்று அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதால் பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது. கடந்த புதன்கிழமை அன்று தாக்குதல் நடந்துள்ளது. அதனால் அந்தப் பகுதியில் உள்ள ராவல்பிண்டி மைதானத்தில் போட்டியை நடத்துவது பாதுகாப்பில்லை எனக் கருதுவதால், கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகளுக்கு இடையேயான போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எந்தத் தேதியில் அந்தப் போட்டி நடத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. இது பாகிஸ்தான் சூப்பர் லீக் -க்கு ஏற்பட்ட முதல் பின்னடைவாகும். விரைவில் அந்தத் தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் வெளியேற விருப்பம் தெரிவித்தால், அந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் தற்போது நடந்த அவசரக் கூட்டத்தில், பாகிஸ்தான் சூப்பர் லீக் மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உள்ள துபாய் அல்லது கத்தார் தலைநகர் தோஹா அல்லது கராச்சி ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒன்றுக்கு மாற்றுவதற்கான திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.