கராச்சி: இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் உலகின் முதன்மை கிரிக்கெட் நிகழ்வாக இருக்கிறது. அதற்கு போட்டியாக பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த தொடர் இதுவரை பெரிய அளவில் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை.
இந்த நிலையில் 2025 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நேற்று தொடங்கியது. இந்த முறை ஐபிஎல் தொடர் நடைபெறும் அதே தேதிகளில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்தி வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு. நாங்களும் ஐபிஎல்-க்கு இணையானவர்கள் என்பதை வெளிகாட்டவே இந்த முயற்சி.

ஆனால் எப்போதும் போல ரசிகர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை விரும்பவில்லை என்பது முதல் போட்டியிலேயே வெட்ட வெளிச்சமானது. கராச்சியில் நேற்று முதல் போட்டி பல்வேறு துவக்க விழா நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ரசிகர்கள் மைதானம் முழுவதும் நிரம்பி வழிவார்கள் என்ற எண்ணத்தில் சுமார் 6700 பாதுகாவலர்கள் அழைக்கப்பட்டு மைதானம் முழுவதும் சுற்றி நிறுத்தப்பட்டு இருந்தனர்.
ஆனால், வேடிக்கை என்னவெனில் மொத்தமே 5000 ரசிகர்கள் தான் மைதானத்திற்கு நேரில் வந்தனர். ரசிகர்கள் எண்ணிக்கையை விட பாதுகாவலர்கள் எண்ணிக்கையே அதிக அளவில் இருந்தது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மிகப்பெரிய தோல்வி அடைந்திருப்பதாக சமூக வலைதளங்களில் அந்த நாட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் அலி ஐபிஎல்-ஐ சீண்டும் வகையில் சில விஷயங்களை பேசி இருந்தார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் துவங்கியவுடன் ரசிகர்கள் ஐபிஎல் தொடரை பார்ப்பதை நிறுத்தி விடுவார்கள் என்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் அதை பார்ப்பார்கள் என்றும் பேசியிருந்தார்.
ஆனால், முதல் போட்டியில் நேரிலேயே ரசிகர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது.
முகமது ரிஸ்வான் 43 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார். மைக்கேல் பிரேஸ்வெல் 17 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். அடுத்ததாக பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணியில் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி 43 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார். குஷ்தில் ஷா 37 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். அந்த அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.