மும்பை: 2025 பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் பாகிஸ்தானிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மாற்றப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ராவல்பிண்டி மைதானத்திற்கு அருகே ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் வியாழக்கிழமை அன்று ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்த கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டது.

அதன் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை நடத்துவது குறித்து கூட்டம் நடத்தியது. அதன் முடிவில், இந்தத் தொடரில் மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மாற்றுவதாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
மே 18 உடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மற்றும் அந்தத் தொடரில் பங்கேற்று இருக்கும் வெளிநாட்டு வீரர்கள் அச்சத்தில் இருந்தனர். அதன் காரணமாகவே இந்த மாற்றம் நடந்திருக்கிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் முடிந்தவுடன் 3 நாட்களில் வங்கதேசம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால், வங்கதேச கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL)-இல் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) சென்று தொடர்ந்து போட்டிகளில் விளையாட உள்ளனர்.
அதேபோல, 2025 ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக ரயிலில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.