துபாய்: 2025 பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் காலவரையின்றி நிறுத்தப்பட்டிருக்கிறது. இரு நாட்கள் முன்பு தாங்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தது. ஆனால், அங்கு அனுமதி கிடைக்காததால் பாகிஸ்தானுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் தொடர் ஒரு வார காலத்திற்கு மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் ஐபிஎல் தொடர் ஒரு மாதத்திற்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அறிவித்தது.

அந்த அறிவிப்பு வெளியானதற்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளைத் தங்கள் நாட்டில் நடத்த முடியாது எனத் தெரிவித்துவிட்டது. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) இது குறித்துத் தெளிவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த அனுமதித்தால், அந்த நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது போன்ற பிம்பம் ஏற்படும். மேலும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) பிசிசிஐ-யை விட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவாக இருப்பது போன்ற நிலை ஏற்படும்.
இது போன்ற காரணங்களால் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB), பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நடத்த முடியாது எனக் கைவிரித்து விட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தெற்காசியாவைச் சேர்ந்த பல நாட்டவர்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்தினால், அதனால் அங்கு வசிக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்படலாம், ஏதேனும் பதற்ற சூழல் ஏற்படலாம் என்பதும், இந்தப் போட்டிகளை தற்போது நடத்த முடியாது என அறிவிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த முடிவை எடுக்கும் முன்னரே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடக்கும் என அறிவிப்பை வெளியிட்டு விட்டது. அதனால், தற்போது அந்த வாரியத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முடிவு என்ன என்பது கூட தெரிந்து கொள்ளாமல், அவசரகதியில் பெருமைக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தாங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகளை நடத்த உள்ளதாக அறிவித்தது, தற்போது ஏற்பட்ட அவமானத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.
மறுபுறம் ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகளும் பிசிசிஐ-யைத் தொடர்புகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) பிசிசிஐ-க்கு நேரடியாகவே அழைப்பு விடுத்துள்ளது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.