மும்பை: பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரிலிருந்து இரண்டு இங்கிலாந்து நாட்டு வீரர்கள் வெளியேற முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் தங்களின் அணி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு உள்ளனர்.
மேலும், ஐந்து இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டுக்கு செல்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தம் 7 இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் இடம்பெற்றிருக்கின்றனர். இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை நடத்தியது.

அதனால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாட்டு எல்லையிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் தான், முல்தான் சுல்தான்கள் (Multan Sultans) என்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அணியில் இடம்பெற்றிருக்கும் இங்கிலாந்து நாட்டு வீரர்களான டேவிட் வில்லி மற்றும் கிறிஸ் ஜோர்டன், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் போர் பதற்றம் நிலவி வருவதால் தங்கள் நாட்டுக்குத் திரும்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மற்ற வீரர்களும் இது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (PCA) ஆகியவை தங்கள் நாட்டு வீரர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து வீரர்களை வெளியேறுமாறு இந்த இரண்டு அமைப்புகளும் அறிவிப்பு வெளியிடவில்லை.
எனினும் இப்போதைக்கு இரண்டு வீரர்கள் வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற ஐந்து வீரர்களையும் பாகிஸ்தானில் உள்ள இங்கிலாந்து வீரர்களுக்கான ஏஜென்ட் ஒருவர் சமாதானம் செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடைபெற்ற முதல் இரண்டு நாட்களுக்கு பாகிஸ்தானில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனாலேயே இங்கிலாந்து வீரர்கள் பதற்றமடைந்திருந்தனர். ஆனால், தற்போது பாகிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவை மீண்டும் தொடங்கியிருக்கிறது. அதனால் வீரர்கள் சமாதானமடைந்து இருப்பதாகவும், தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அந்த ஏஜென்ட் தெரிவித்திருக்கிறார்.
எனினும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றால், நிச்சயமாக இங்கிலாந்து வீரர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இடம்பெற்றிருக்கும் மற்ற வெளிநாட்டு வீரர்களும் வெளியேற அழுத்தம் கொடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
அதே சமயம் இந்தியாவிலும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கு பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தரம்சாலாவில் நடத்தப்படவிருந்த போட்டிகள் மட்டுமே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மற்றபடி அனைத்து வெளிநாட்டு வீரர்களும் பாதுகாப்பாகவே உள்ளனர். இதுவரை யாரும் வெளியேறுவது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இந்திய அரசின் ஆலோசனையுடன் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.