லாகூர்: 2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் முதல் போட்டியிலேயே வெள்ளை நிற பந்து திடீரென பிங்க் நிறமாக மாறிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி வெள்ளைப்பந்து பிங்க் நிறத்திற்கு மாறியது என குறிப்பிட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கலாய்த்து வருகின்றனர்.
லாகூர் கடாபி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான லாகூர் கலந்தர்ஸ் மற்றும் மார்னஸ் லபுசேன் தலைமையிலான ஹைதராபாத் கிங்ஸ்மென் அணிகள் மோதின. முதலில் பந்துவீசிய ஹைதராபாத் அணி வீரர்கள், பந்தின் பளபளப்பை தக்கவைக்க தங்களது மெரூன் நிற ஜெர்சியில் பந்தை அடிக்கடி தேய்த்துள்ளனர். அப்போது ஜெர்சியில் இருந்த சாயம் பந்தில் அப்படியே ஒட்டிக்கொண்டதால், வெள்ளை நிற பந்து பிங்க் நிறமாக மாறியது.

இதைப் பார்த்த ரசிகர்கள், அணி நிர்வாகம் வீரர்களுக்கு வழங்கிய ஜெர்சியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பல ரசிகர்கள், "பாகிஸ்தான் உலகின் முதல் பிங்க் பால் டி20 போட்டியை நடத்தி சாதனை படைத்துவிட்டது" என்று கிண்டலடித்து வருகின்றனர். மேலும் சிலர், இந்த தொடரை தெரு கிரிக்கெட் என்று கலாய்த்து தள்ளுகின்றனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் 39 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ஹசீபுல்லா கான் 40 ரன்களும், சிக்கந்தர் ராசா 24 ரன்களும் சேர்த்தனர். ஹைதராபாத் தரப்பில் ஹசன் கான் மற்றும் ரிலே மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தானில் தற்போது நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. முதலில் 6 நகரங்களில் திட்டமிடப்பட்டிருந்த 44 போட்டிகள் கொண்ட இந்த தொடர், செலவுகளை குறைப்பதற்காக லாகூர் மற்றும் கராச்சி என 2 நகரங்களுக்கு மட்டுமே சுருக்கப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்கள் யாருமின்றி மூடிய மைதானத்திலேயே அனைத்து போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செலவுகளை மிச்சப்படுத்த தொடக்க விழாவும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் 8 அணிகள் விளையாடும் நிலையில், கிரிக்கெட் தொடங்குவதற்கு முன்பாகவே ரசிகர்கள் இந்த தொடரை "பெட்ரோல் தட்டுப்பாடு லீக்" என்று வறுத்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.