லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக, வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது அணியான லாகூர் குவாலண்டர்ஸ் தான் இந்த அபராதத்தை விதித்தது. ஹோட்டல் அறைக்கு பார்வையாளர்களை உடன் அழைத்துச் சென்றதே இந்த விதிமீறலுக்குக் காரணம்.
ஷஹீன் அப்ரிடி மற்றும் அவரது சக வீரர் சிகந்தர் ராசா ஆகியோர் "கடுமையான பாதுகாப்பு விதிமீறல்" செய்ததாக பஞ்சாப் காவல்துறை குற்றம் சாட்டியது. நான்கு பார்வையாளர்களை அறைக்குள் அனுமதிக்க இருவரும் அனுமதி கோரியதாகவும், ஆனால் மறுக்கப்பட்ட போதிலும் அவர்களை விடாபடியாக அறைக்குள் அழைத்துச் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்தது. அங்கு அவர்கள் சுமார் மூன்று மணிநேரம் தங்கியிருந்ததாகப் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு லாகூர் குவாலண்டர்ஸ் அணி விளக்கமளித்தது. இது தவறான புரிதலால் ஏற்பட்டது என்றும், வேண்டுமென்றே விதிகளை மீறவில்லை என்றும் அணி உறுதிப்படுத்தியது. மேலும், பாதுகாப்புப் பணியாளர்களைப் பாராட்டி, அனைத்து நெறிமுறைகளுக்கும் மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த பாதுகாப்பு விதிமீறலுக்குத் தான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக சிகந்தர் ராசா அறிவித்தார். ஷஹீன் அப்ரிடி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், இந்தச் சம்பவத்தில் தன்னை மட்டுமே குற்றவாளியாகக் கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஷஹீன் தனக்கு உதவியது தனது வேண்டுகோளின் பேரில் மட்டுமே என்றும் ராசா கூறினார்.
இது குறித்து பேசிய ராசா, "ஷஹீன் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. என் நண்பர்களும் குடும்பத்தினரும் வந்திருந்தனர். என் கோரிக்கையின் பேரில் தான் அவர்களை என் அறைக்கு அழைத்து வர ஷஹீன் உதவினார். இது விதிமீறல்களுக்கு எதிரானது என்று எனக்குத் தெரியவில்லை, ஓரளவுக்கு ஷஹீனுக்கும் தெரியவில்லை. இங்குக் குற்றவாளி நான்தான், ஷஹீன் அல்ல," என்று தனது விளக்கத்தைத் தொடங்கினார்.

"எனது வேண்டுகோளின்படிதான் அவர் கீழே சென்றார், ஏனென்றால் அவர்கள் என் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். நான் அவர்களை வணிக மையத்தில் சந்திக்க விரும்பவில்லை. நாங்கள் 40 நிமிடங்கள் மேல் தளத்தில் அமர்ந்திருந்தோம்," என தனது தரப்பை எடுத்துரைத்தார்.