டெல்லி: இந்தியாவின் தோல்வியால் ரசிகர்கள் வேதனையில் மூழ்கியிருந்த நேரத்தில் பாகிஸ்தான் டிவி ஒன்று அதை மறைமுகமாகக் கொண்டாடி களித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நேற்று சிட்னியில் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்து வெளியேறியது.

இந்தியா, ஆஸ்திரேலியா டிவியை உலகின் பல நாடுகளிலும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். இந்தியாவே நேற்று இந்தப் போட்டியால் ஸ்தம்பி்த்துப் போயிருந்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிடிவி ஸ்போர்ட்ஸ் என்ற டிவியும் இந்தப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்தது. இந்தப் போட்டியை பாகிஸ்தானிய ரசிகர்களம் ஆர்வத்துடன் பார்த்தனர்.
பாகிஸ்தான் காலிறுதிப் போட்டியோடு வெளியேறிய நிலையில், நேற்றைய போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தான் ரசிகர்களிடம் காணப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா நேற்று தோல்வியுற்றது பாகிஸ்தான் ரசிகர்களிடையே இரு விதமான கருத்துக்களை ஏற்படுத்தியது. அதேசமயம், நேற்று ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சனிடம் சிக்கி இந்தியா தடுமாறிப் போனதை விவரிக்கும் வகையில், மிட்சல் ஜான்சன் வாயிலிருந்து நெருப்பை உமிழ்வது போன்ற படத்தை பிடிவி ஸ்போர்ட்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்தது.
இது சந்தோஷ நெருப்பா அல்லது ஸ்போர்ட்டிவ் நெருப்பா என்றுதான் தெரியவில்லை!