டெல்லி: அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 29ம் தேதி வரை அளிக்கலாம்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு மே 30ம் தேதி துவங்கி, ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா உள்பட 10 நாடுகள், 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று துவங்கியுள்ளது. இந்த மாதம் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான பப்ளிக் பாலட் துவங்கியுள்ளது. அதன்படி உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் எந்தெந்த போட்டிகளுக்கு டிக்கெட் வேண்டுமோ அதற்காக விண்ணப்பிக்கலாம். ஒருவர் எவ்வளவு போட்டிகளுக்கு வேண்டுமானாலும், எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
இந்த மாதம் 29ம் தேதி வரை வரும் அனைத்து விண்ணப்பங்களையும் கம்ப்யூட்டரில் பரிசீலித்து, தேவைப்பட்டால் குலுக்கல் முறையில் டிக்கெட் வழங்கப்படும். அடுத்த மாதத்தில் யார் யாருக்கு டிக்கெட் கிடைத்துள்ளது என்பது அறிவிக்கப்பட உள்ளது.