ஆலூர் : துலீப் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் சோன் அணி வீரர்கள் அபாரமாக விளையாடி முன்னிலை பெற்றிருக்கிறார்கள். வெஸ்ட் சோன் மற்றும் சென்ட்ரல் சோன் அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் கேரளாவின் ஆலூரில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் சோன் அணியில் புஜாரா, சூரியகுமார் யாதவ், சர்பிராஸ்கான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

அதிகபட்சமாக அதித் செத் 74 ரன்கள் எடுக்க வெஸ்ட் சோன் அணி 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் சென்ட்ரல் சோன் அணிக்காக பந்துவீசிய சிமம் மவி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து சென்ட்ரல் சோன் அணி வீரர்கள் பேட்டிங் செய்தனர். இதில் ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாட வில்லை. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு விளையாடிய துருவ் ஜூரல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கேகேஆர் அணிக்கு விளையாடிய ரிங்கு சிங் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுக்க அந்த அணி 128 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் சோன் அணி சார்பாக விளையாடிய அசான் நாக்வஸ்வலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வெஸ்ட் சோனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதில் பிரிதிவிஷா 25 ரன்களிலும்,பிரியாங் பாஞ்சல் 15 ரன்களிலும் ஆட்டமிழக்க, புஜாரா சூரியகுமார் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக விளையாடினர். இதில் சூரியகுமார் யாதவ் 58 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இதில் எட்டு பவுண்டர்களும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
பொறுமையாக விளையாடிய புஜாரா 103 பந்துகளில் அரை சதம் எடுத்து களத்தில் இருக்கிறார். இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவில் வெஸ்ட் சோன் அணி 149 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது சென்ட்ரல் சோன் அணியை விட 241 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் வெஸ்ட் சோன் அணி இருக்கிறது. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா தற்போது அரை சதம் அடித்து களத்தில் நிற்கிறார்.