லண்டன் : இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர் புஜாராவுக்கு இங்கிலாந்து கவுன்டி தொடரில் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.
புஜாரா எந்த தவறும் செய்யாத நிலையில், அவரது அணி வீரர்கள் செய்த தவறுக்கு அவருக்கும் சேர்த்து கேப்டன் என்ற முறையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவறு என்றால் சாதாரண தவறு அல்ல. வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் கிரிக்கெட்டின் இறையாண்மைக்கு எதிரான செயலில் ஜாக் கார்சன் என்ற வீரர் ஈடுபட்டார். இது கவுன்டி தொடரில் மிகப் பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கே அவப்பெயரை உண்டாக்கி உள்ளது இந்த சம்பவம். என்ன நடந்தது?
வெளிநாட்டு வீரர்கள் : இங்கிலாந்து நாட்டில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் பல்வேறு மாநில கவுன்டி அணிகள் பங்கேற்று வருகின்றன. அந்த அணிகள் ஒரு போட்டியில் இரண்டு வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
புஜாரா எந்த அணி? : அந்த வகையில் இந்திய வீரர்களான புஜாரா, ஜெயதேவ் உனட்கட், சாஹல் உள்ளிட்டோர் பல்வேறு கவுன்டி அணிகளில் இடம் பெற்று ஆடி வருகின்றனர். முன்னணி கவுன்டி அணிகளில் ஒன்றான சசக்ஸ் அணியில் புஜாரா, ஜெயதேவ் உனட்கட் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
கேப்டன் பதவி : புஜாரா மூத்த டெஸ்ட் அணி வீரர் என்பதால் சசக்ஸ் அணி அவரை தங்கள் அணியின் கேப்டனாக நியமித்து இருக்கிறது. இந்த நிலையில், சசக்ஸ் அணி கவுன்டி டிவிஷன் இரண்டு எனும் பிரிவில் இடம் பெற்று மற்ற அணிகளுடன் மோதி வருகிறது. இந்த பிரிவில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பெற்றால் அந்த அணி அடுத்த டிவிஷனுக்கு முன்னேற முடியும்.
சசக்ஸ் - லெய்சஸ்டர்ஷயர் போட்டி : கடந்த செப்டம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை சசக்ஸ் - லெய்சஸ்டர்ஷயர் அணிகளுக்கு இடையே ஆன முதல் தர டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் சசக்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 262 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய லெய்சஸ்டர்ஷயர் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மோசமான செயல் : அடுத்து சசக்ஸ் அணி 344 ரன்கள் குவித்து லெய்சஸ்டர்ஷயர் அணிக்கு 499 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. இடையே லெய்சஸ்டர்ஷயர் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. அப்போது சசக்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஜாக் கார்சன் எதிரணி பேட்ஸ்மேன் பென் காக்ஸ் ரன் எடுக்க ஓடி வந்த போது அவரது காலை தட்டி விட்டார். கிட்டத்தட்ட டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் பந்தை தேய்க்க முயற்சித்தது போன்ற ஒரு சம்பவம்தான் இது.

பெனால்ட்டி : அதை அம்பயர்கள் கவனித்து விட்டனர். ஜாக் அதை வேண்டுமென்றே செய்தார் என்பது குறித்து அம்பயர் சசக்ஸ் அணி வீரர்களிடம் விவரித்த போது டாம் ஹெய்னஸ் மற்றும் அரி கார்வேலஸ் வாதம் செய்ததால் அவர்கள் மூவருக்கும் பெனால்ட்டி விதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் சசக்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும், அந்த அணி தவறுக்கான தண்டனையாக புள்ளிகளை இழந்துள்ளது.
புஜாராவுக்கு தடை : இந்த சீசனில் சசக்ஸ் அணி நான்கு தவறுகளை செய்து பெனால்டி பெற்று இருக்கும் நிலையில், விதிப்படி அந்த அணிக்கு இந்த சீசனில் 12 புள்ளிகளை குறைத்து இருக்கிறது கவுன்டி கிரிக்கெட் நிர்வாகம். மேலும், ஒரே சீசனில் ஒரு அணி நான்கு முறை பெனால்ட்டி பெற்றால் அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். அந்த வகையில் இந்த வீரர்களுக்கு கேப்டனாக இருந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவி புஜாராவுக்கும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.