புஸ்வானமான புஜாரா
பேட்டிங்கில் ஓரளவு நல்ல வலிமையான அணியை தான் தேர்வு செய்திருக்கிறோம் என்று கோச் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு, ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. சரி.. ஓப்பனிங் தான் சரியில்லை. வலிமையான மிடில் ஆர்டர் அணியை தாங்கிப் பிடிக்கும் என்று எதிர்பார்த்தால் அங்கேயும் ஒன்றும் நடக்கவில்லை. குறிப்பாக, புஜாரா. 80 பந்துகளை சந்தித்து 7 அல்லது 8 ரன்களுக்கு அவுட்டாகி சென்றதைத் தவிர, அவரால் அணிக்கு வேறு ஒன்றுமே செய்ய முடியவில்லை.
புஜாரா டார்கெட்
முதல் இன்னிங்ஸில் 54 பந்துகளில் 8 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 80 பந்துகளுக்கு 15 ரன்களும் என மொத்தம் 23 ரன்களே எடுத்தார். பந்துகளை அவர் அதிகம் வீணாக்குவது இங்கு பிரச்சனையே அல்ல. ஆனால், அதை பயன்படுத்தி தொடர்ந்து ரன்கள் அடிக்க முடியாமல் சிரமப்படுகிறார். இது தான் சிக்கல். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி கூட, 'முடியும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் தான் அணிக்கு தேவை' என்ற தொனியில் மறைமுகமாக புஜாராவை விமர்சித்து இருந்தார்.
மாயங்க் அகர்வால்
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான தொடங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இருந்து புஜாராவை நீக்குவது குறித்து, ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஓரிரண்டு போட்டிகளுக்கு அவரை வெளியில் உட்கார வைத்து அவருக்கு பதில் மாயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பளித்தது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன ரீதியாக
புஜாரா பேட்டிங் திறமை குறையவில்லை. ஆனால், அவரது கான்ஃபிடண்ட் லெவலில் தான் பிரச்சனை இருப்பதாக வாரியம் கருதுகிறது. இதனால் சில போட்டிகள் வெளியே உட்கார வைத்தால், நிச்சயம் அது அவருக்கு மன ரீதியிலான வலிமையை, தெளிவை கொடுக்கும் என்று கருதுவதால், புஜாராவுக்கு பதில் மாயங்க் இந்திய அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், புஜாராவிடம் இதுகுறித்து எடுத்துரைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.