லண்டன் : இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் டெஸ்ட் அணி வீரர் புஜாரா பங்கேற்று ஆடி வந்தார்.
சசக்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவருக்கு, கடைசியாக ஆடிய போட்டியில் தன் அணி வீரர்கள் செய்த மோசமான தவறுக்காக அடுத்த போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தன் வலியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் மீதமுள்ள போட்டிகளில் ஆடாமல் இந்த சீசனில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளார் புஜாரா.

சசக்ஸ் அணியில் புஜாரா : இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் என்பது முதல் தர டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகும். இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் அணிகள் அந்த தொடரில் பங்கேற்கும். அதில் ஒவ்வொரு அணியும் இரு வெளிநாட்டு வீரர்களை தங்கள் அணியில் ஆட வைக்கலாம். சசக்ஸ் அணி இந்திய வீரர்களான புஜாரா மற்றும் ஜெயதேவ் உனட்கட்டை தங்கள் அணியில் ஆட வைத்துள்ளது.
புஜாரா அனுபவம் மிக்க டெஸ்ட் வீரர் என்பதால் அவரை சசக்ஸ் அணி கேப்டனாக நியமித்து கவுரவப்படுத்தி இருந்தது. ஆனால், கவுரவம், கவுரவம் என்று இப்போது அதை கெடுத்து அவருக்கு அவப்பெயரை உண்டாக்கும் செயலில் அந்த அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
என்ன நடந்தது? : சசக்ஸ் அணி, லெய்சஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் ஆடியது. இந்தப் போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் சசக்ஸ் அணி 499 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயம் செய்தது. லெய்சஸ்டர்ஷயர் அணி அந்த கடின இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது.
ஆனால், போட்டியில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த இளம் சுழற் பந்துவீச்சாளர் ஜேக் கார்சன், எதிரணி பேட்ஸ்மேன் பென் காக்ஸ் ரன் ஓடி வந்த போது தன் காலை வைத்து அவரை தடுமாறி விழச் செய்தார். அதன் மூலம், அவரை ரன் அவுட் செய்து விடலாம் என்பதே அவரின் எண்ணம்.
ஆனால், அவர் ரன் அவுட் ஆகவில்லை. அடுத்த சில நிமிடங்களில் அம்பயர்கள் இந்த சம்பவம் குறித்து சசக்ஸ் அணி வீரர்களுக்கு அவர்கள் செய்தது விதிப்படி தவறு என விளக்கினர். அப்போது அதை எதிர்த்து சில வீரர்கள் வாதம் செய்தனர். இந்த நிலையில், ஜேக் கார்சன், டாம் ஹெய்ன்ஸ் மற்றும் அரி கார்வேலஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கு பெனால்ட்டி கொடுக்கப்பட்டது.
ஒரே ஆண்டில் நான்கு பெனால்ட்டி பெற்றால் வீரர்களுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். அதே போல, ஒரே அணி ஒரே சீசனில் நான்கு பெனால்ட்டிகளை பெற்றால் அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்படும். இந்த ஆண்டில் சசக்ஸ் அணி வீரர்கள் செய்யும் நான்காவது விதிமீறல் இது. அந்த வகையில் கேப்டனாக இருந்த புஜாராவுக்கு அடுத்த போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது.
இன்னும் இந்த சீசனில் இரண்டு போட்டிகளே மீதமுள்ளன. அதில் ஒரு போட்டியில் தடை காரணமாக ஆட முடியாவிட்டாலும், கடைசி போட்டியில் ஆடலாம். ஆனால், இத்தனை மோசமான சம்பவங்களுக்கு பிறகு இந்த சீசனில் சசக்ஸ் அணியில் இருந்து வெளியேற முடிவு செய்த புஜாரா தன் வெறுப்பை காட்டாமல் அமைதியாக வெளியேறி இருக்கிறார்.
அவர் ட்விட்டரில், "இந்த வகையில் வெளியேறுவது மிகப் பெரும் ஏமாற்றமாக உள்ளது. ஆனால், இந்த கவுன்டி சீசனின் சில மறக்க முடியாத நினைவுகளை, நிகழ்வுகளை எடுத்துச் செல்கிறேன். இந்த குழு குறித்து நான் பெருமைப்படுகிறேன். அடுத்த இரண்டு போட்டிகளில் நன்றாக ஆட சசக்ஸ் அணிக்கு என் வாழ்த்துக்கள்." என கண்ணியமாக கூறி வெளியேறி உள்ளார்.