மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு 'தி வால்' (The Wall) என்ற பெயரைத் தக்கவைத்த வீரரான செதேஷ்வர் புஜாரா தான் பெரிய ஸ்கோர் அடிக்கும் வீரராக மாற்றியது எது? என்ற சுவாரஸ்யமான பின்னணியை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவுக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புஜாராவின் அசைக்க முடியாத பேட்டிங் திறமைக்கு அடித்தளமிட்டது, அவர் சௌராஷ்டிரா அணிக்காக ஆடிய உள்ளூர் போட்டிகள்தான். இதுகுறித்து 'கிரிக்பஸ்' தளத்திற்கு அளித்த பேட்டியில் புஜாரா கூறியதாவது:
"நான் மிக இளம் வயதிலேயே சௌராஷ்டிரா அணிக்காக விளையாடத் தொடங்கிவிட்டேன். அப்போது எங்கள் அணி சற்று பலவீனமான அணியாகவே இருந்தது. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் நான் சதம் அடித்துவிட்டு ஆட்டமிழந்த பிறகு, எங்கள் அணி வெறும் 220-230 ரன்களுக்குள் சுருண்டுவிடும். சில சமயங்களில் 180-190 ரன்களுக்குக் கூட ஆல் அவுட் ஆகிவிடுவோம்," என்று தனது ஆரம்ப கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், "அந்தப் போட்டிகளில் அணியின் மொத்த ரன்களில் பெரும் பகுதியை நானே அடித்திருப்பேன், ஆனாலும் இறுதியில் நாங்கள் தோற்றுவிடுவோம். அப்போதுதான் நான் ஒன்றை உணர்ந்தேன், நான் வெறும் சதம் அடிப்பது மட்டும் அணிக்கு போதாது. நான் பெரிய சதங்களை அடிக்க வேண்டும்."
"அதன்பிறகுதான், 14, 16, மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் 150, இரட்டை சதம், ஏன் முச்சதம் அடிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயிக்கத் தொடங்கினேன். இப்படித்தான் பொறுமை, ஒழுக்கம் மற்றும் பெரிய ரன்களைக் குவிக்க வேண்டும் என்ற உறுதியான பழக்கம் எனக்குள் வளர்ந்தது" என்றார்.
"இந்தப் பழக்கம் ரஞ்சி டிராபி போட்டியிலும் தொடர்ந்தது. அப்போது, சௌராஷ்டிரா அணி 'பிளேட்' பிரிவில் இருந்தது. நான் அறிமுகமான பிறகு, நாங்கள் 'எலைட்' பிரிவுக்குத் தகுதி பெற்றோம், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் சரியாகத் தொடங்கியது. ஆனால், நான் ஒரு பலவீனமான அணிக்காக விளையாடினால், வெறும் சதம் அடிப்பது மட்டும் போதாது என்பதை நான் உணர்ந்தேன்" என்று கூறினார்.
"அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றால், நீங்கள் பெரிய ஸ்கோர்களை அடித்தே ஆக வேண்டும். அப்படிதான் அந்தப் பழக்கம் என்னிடம் தொடங்கியது, அதுவே தொடர்ந்தது. காலப்போக்கில், சௌராஷ்டிரா ஒரு வலிமையான அணியாக மாறியது. ஆனால், ஒருமுறை நீங்கள் ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால், அது உங்களுடன் நீண்ட காலம் நிலைத்திருக்கும்" என்று புஜாரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.