மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த ஆண்டுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த அணிகளில் ஒன்றாக மாறி உள்ளது. இந்த நிலையில், அந்த அணியின் உரிமையாளர்கள் பிளேயிங் 11 மற்றும் கேப்டன்சி போன்ற முக்கியமான கிரிக்கெட் முடிவுகளில் முன்பு தேவையில்லாமல் தலையிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி மோஹித் பர்மன் (46% உரிமை), பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா (23% உரிமை), நெஸ் வாடியா (23% உரிமை) மற்றும் கரண் பால் (8% உரிமை) ஆகியோரால் கூட்டாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துப் பேசிய இர்பான் பதான், ஆரம்ப காலங்களில் உரிமையாளர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்று தெரிவித்தார்.

"கிரிக்கெட் பின்னணி இல்லாத உரிமையாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இடையே பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஒரு உரிமையாளர் சிறந்த முடிவுகளைப் பெற ஒரு குறிப்பிட்ட அணியைக் களமிறக்க வேண்டும் என்பார். மற்றொரு உரிமையாளர் வேறு ஒரு பிளேயிங் 11 கலவையை விரும்புவார். உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களின் இந்த ஒருங்கிணைப்பு இல்லாத தன்மை அணியின் முடிவுகளைக் கடுமையாகப் பாதித்தது" என்று பதான் கூறினார்.
2008 இல் நடந்த முதல் சீசனில் அரையிறுதிக்கு முன்னேறிய பஞ்சாப் அணி, 2009 இல் தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரில் மோசமாகச் செயல்பட்டது. இதனால் 3 ஆவது சீசனில் அணியின் தலைமை மாற்றப்பட்டது. இதைக் குறிப்பிட்ட இர்பான் பதான், பல ஆண்டுகளில் அணி 12 கேப்டன்களை மாற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
ஒரு அணியில் நிலையான தலைமை இல்லாதபோது, வீரர்களுக்குத் தங்கள் இடம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். அதிக போட்டி நிறைந்த ஐபிஎல் போன்ற தொடர்களில், வீரர்கள் பாதுகாப்பாக உணராவிட்டால் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியாது. கடந்த சில ஆண்டுகள் வரை பஞ்சாப் அணியில் இதுவே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது என்று அவர் விளக்கினார்.

இருப்பினும், தற்போதைய நிலவரம் நிறைய மாறியுள்ளதாக இர்பான் பதான் மகிழ்ச்சி தெரிவித்தார். அணியில் தற்போது அதிக நிலைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியில் அந்த அணி சிறப்பாகச் செயல்படுகிறது. இதன் விளைவாகவே 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது வரலாற்றில் 2 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
