சென்னை : டிஎன்பில் சீசன் 3 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நாளை முதல் நடைபெறவிருக்கின்றன.லீக் போட்டிகளில் இருந்து மொத்தம் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. திண்டுக்கல் ட்ராகன்ஸ்,மதுரை பேந்தர்ஸ்,லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் காரைக்குடி காளை ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நான்கு அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிந்து விடும்.நாளை நடக்கும் குவாலிபையர் 1 போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி நாளை மறுதினம் நடைபெறும் எலிமினெட்டர் போட்டியில் வெல்லும் அணியுடன் மீண்டும் மோதும். அப்போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.நாளை நடைபெறும் முதல் குவாலிபையர் போட்டியில் மோதும் அணிகளை பற்றிய சிறு அலசல்.இரு அணிகளும் லீக் போட்டிகளில் தலா 5 வெற்றிகளையும் இரண்டு தோல்விகளையும் பெற்றுள்ளது. ஆனால் திண்டுக்கல் அணி மதுரை அணியை விட ரன் விகிதத்தில் வலுவான நிலையில் உள்ளது. இரு அணிகளும் லீக் சுற்றில் ஒரு முறை மோதியுள்ளன. அப்போது திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்:திண்டுக்கல் அணியின் ஜெகதீசன் 302 ரன்களையும்,ஆர் விவேக் 192 ரன்களையும்,ஹரி நிஷாந்த் 192 ரன்களையும் குவித்து சிறப்பான பார்மில் உள்ளார்கள். ஜெகதீசன் அதிக ரன் குவித்த வீரர்களில் நான்காமிடம் பெற்றுள்ளார்.மதுரை அணியை பொறுத்தவரை அந்த அணியின் அருண் கார்த்திக் 307 ரன்களையும்,தலைவன் சற்குணம் 178 ரன்களையும், ஜே கௌசிக் 160 ரன்களையும் குவித்துள்ளார்கள். அருண் கார்த்திக் இந்த தொடரில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர்.பேட்டிங்கை பொறுத்தவரை இரண்டு அணிகளும் சரியான விகிதத்திலேயே உள்ளது. ஆனால் திண்டுக்கல் அணி அடித்த ரன்களின் எண்ணிக்கை மதுரை அணியை விட சற்றே அதிகம்.பந்துவீச்சு: பந்துவீச்சை பொறுத்தவரை திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். அவர் தற்போது இங்கிலாந்தில் விக்கெட்களை வீழ்த்தி கொண்டிருக்கிறார். திண்டுக்கல் அணியில் அபினவ் அதிகபட்சமாக 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.மதுரை அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் சற்று வலிமையாகவே உள்ளது. அந்த அணியின் ராகுல் ஷா 8 விக்கெட்களையும்,அபிஷேக் தன்வார், கௌசிக்,வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்கள்.இது ஒரு சவாலான போட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம்.