கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறிய பிறகும், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களை விட தாமதமாகத் தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து அணியை மட்டும் ஐசிசி முன்னுரிமை கொடுத்து அனுப்பி வைப்பதாகத் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாகச் சர்வதேச விமானப் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகப் பல நாடுகள் தங்களது வான்வெளியை மூடியுள்ளன. இதன் காரணமாகப் பல வணிக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றுத் தாயகம் திரும்ப வேண்டிய இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளும் இந்தியாவில் சிக்கிக்கொண்டன.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை லீக் சுற்றுடன் வெளியேறியது. தென்னாப்பிரிக்கா அணி புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் தோல்வியடைந்தது.

வியாழக்கிழமை தோல்வியடைந்த இங்கிலாந்து அணிக்கு, சனிக்கிழமை மாலையே மும்பையிலிருந்து லண்டன் செல்வதற்குத் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவர்களுக்கு முன்பே புதன்கிழமை தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா அணி இன்னும் இந்தியாவில் காத்திருக்கிறது. இது குயின்டன் டி காக்கை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. எங்களை விடத் தாமதமாக வெளியேறிய இங்கிலாந்து அணி எங்களுக்கு முன்பே கிளம்பிவிட்டது. ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருட்டில் தவிக்கின்றன. ஐசிசி-யில் சில அணிகளுக்கு மட்டும் தனிச் செல்வாக்கு உள்ளது என்பது விசித்திரமாக இருக்கிறது" என்று ஐசிசி நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். இங்கிலாந்து அணிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற அணிகளுக்கு ஐசிசி கொடுப்பதில்லை என்பதே அவரது ஆதங்கமாக உள்ளது.

இதற்கிடையில், கொல்கத்தாவில் தங்கியுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அழைத்துச் செல்ல ஐசிசி தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த விமானம் கொல்கத்தாவிலிருந்து முதலில் ஜோகன்னஸ்பர்க் நகருக்குச் செல்லும். அங்கு தென்னாப்பிரிக்கா வீரர்கள் இறங்கிய பிறகு, அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ஏற்றிக்கொண்டு ஆன்டிகுவா செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் இந்த வார இறுதிக்குள் நாடு திரும்பாவிட்டால் இந்த விவகாரம் மேலும் பெரிதாக வெடிக்கும்.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சம்மியும் விமானம் கிடைக்காத விரக்தியில், "நான் வீட்டுக்குப் போக வேண்டும்" என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், தென்னாப்பிரிக்கா அணியின் ஒரு பகுதியினர், அதாவது கேசவ் மகராஜ் உள்ளிட்ட நான்கு வீரர்கள், நியூசிலாந்து தொடருக்காகத் தனியாகப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.