சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் திரும்பினார்.
இந்த சூழலில் அஸ்வின் மிகப்பெரிய தாக்கத்தை சிஎஸ்கே அணிக்காக ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஏமாற்றத்தை அளித்தார். பேட்டிங் பந்து வீச்சு என இரண்டிலுமே அவரால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.

பேட்டிங்கில் 9 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 33 ரன்கள் தான் அடித்து இருந்தார். ஒன்பது போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே ஏழு விக்கெட்டுகளை தான் அவர் கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில் தான் எதிர்பார்த்தபடி சிஎஸ்கே அணிக்காக சரியாக செயல்படவில்லை என்பதை அஸ்வின் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்த தருணத்தில் அஸ்வின் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அணி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு என்னை அணியிலிருந்து விடுவித்து விடுங்கள் என்று கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது.
ஏனென்றால் சிஎஸ்கே அணிக்கு வந்தவுடன் வீடியோ ஒன்றை வெளியிட்ட அஸ்வின், நான் நீங்கள் எதிர்பார்க்காத அளவு சிஎஸ்கே அணிக்காக அதிக ஆண்டு விளையாடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் ஒரு சீசன்தான் முடிவடைந்த நிலையில் நான் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறப் போகிறேன் என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக வரவுள்ள நிலையில் ராஜஸ்தான் அணி அஸ்வினை மீண்டும் கேட்பதாக தெரிகிறது. இதை அறிந்து கொண்ட அஸ்வின் தான் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு செல்ல இருப்பதாகவும் இதனால் தம்மை விடுவித்து விடுங்கள் என்று அஸ்வின் கூறியதாகவும் தெரிகிறது.
சஞ்சு சாம்சனுக்கு பதில் அஸ்வின் சென்றால் அது சிஎஸ்கே அணியின் பலத்தை மேலும் அதிகரிக்க தான் செய்யும் தவிர பலவீனப்படுத்தாது என்று கிரிக்கெட் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். எனினும் அஸ்வின் தானாக செல்கிறாரா? இல்லை அணியில் அவருக்கு ஏதேனும் அவமரியாதை ஏற்பட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.