பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் அஸ்வின்.. புதிய பணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மும்பை: இந்தியாவின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், அறிமுக ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் (ETPL) தொடரில் டப்ளின் கார்டியன்ஸ் (Dublin Guardians) அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்பொறுப்பை ஏற்கவுள்ளார். ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது கிரிக்கெட் பயணத்தின் அடுத்த கட்டமாக இந்த வாய்ப்பை அவர் பார்க்கிறார்.
ராகுல் டிராவிட்டுக்கு சொந்தமான இந்த அணியை வழிநடத்தவுள்ள அஸ்வின், உள்நாட்டு கிரிக்கெட்டில் தான் ஏற்கனவே செய்த இதே போன்ற பணிகளின் தொடர்ச்சியே என்று கூறியுள்ளார்.2024 ஆம் ஆண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை அதன் முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தியபோது, கேப்டன் மற்றும் மெண்டர் பணியை வெற்றிகரமாக இணைத்துச் செயல்பட்டார். மேலும் அவர் ஐபிஎல் தொடரிலும் 28 போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.

"எனது கிரிக்கெட் வாழ்க்கையில் வெறும் வீரராக மட்டுமே இருப்பதை விட, கூடுதல் பங்களிப்பை வழங்க விரும்பும் ஒரு கட்டத்தில் நான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்" என்று ETPL வீரர்கள் ஏலத்திற்குப் பிறகு அஸ்வின் கூறினார். "உள்நாட்டு கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறேன்.
இது அதனோடு நேரடியாகத் தொடர்புடையது. நான் அந்தப் பணியைச் செய்வதை ராகுல் பார்த்திருக்கிறார், என்னால் இதைச் செய்ய முடியும் என்று அவர் நம்பினார். இது நான் அடுத்து செய்ய விரும்பும் ஒரு மாற்றத்திற்கான தொடக்கமாகும்" என்றார்.
"நான் கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக எந்த அணியில் இருந்தாலும் இதைத்தான் செய்து வருகிறேன்" என்று அவர் கூறினார். "நான் ஒரு வீரராக இருந்தாலும், வழிகாட்டியாக இருந்தாலும் அல்லது கேப்டனாக இருந்தாலும், அணிக்குத் தேவையான சரியான முடிவுகளையே எடுப்பேன், அது என்னைச் சார்ந்த முடிவாக இருந்தாலும் சரி."
டப்ளின் அணியின் உரிமையாளராக டிராவிட் இருந்தாலும், களத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளரான டிராவிட் தலையிட மாட்டார் என்றும், கிரிக்கெட் செயல்பாடுகள் முழுவதையும் தனது கைகளில் ஒப்படைத்துள்ளார் என்றும் அஸ்வின் கூறினார்.
"ஒரு கிரிக்கெட் அணியை வழிநடத்தும்போது சுதந்திரம் மிகவும் முக்கியமானது" என்று அஸ்வின் கூறினார். "கிரிக்கெட் சார்ந்த முடிவுகளில் தான் தலையிட விரும்பவில்லை என்பதில் ராகுல் மிகவும் தெளிவாக இருக்கிறார், அதனால்தான் நான் இதன் மையமாக இருக்கிறேன். அணியை உருவாக்குவதற்கும் அதை வழிநடத்துவதற்கும் நான் முழுப் பொறுப்பேற்பேன்."
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்படவுள்ள நிலையில், வெளிநாட்டு தொழில்முறை வீரர்கள் தங்களின் அனுபவத்தையும் விளையாட்டுத் திறனையும் பகிர்ந்து கொள்வதன் மூலம், இந்த லீக் அசோசியேட் நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்தார்.
"இது வீரர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறந்த முறையில் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்கும்" என்று அவர் கூறினார். "டி20 கிரிக்கெட் எப்போதுமே நிலைத்து நிற்கக்கூடியது, இது போன்ற லீக்குகள் கிரிக்கெட்டை உண்மையான சர்வதேச விளையாட்டாக மாற்ற உதவும்."


Click it and Unblock the Notifications

