சென்னை : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்ற தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டிங்கில் 22 பந்துகளில் 30 ரன்கள் அடித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் பந்துவீச்சு 25 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது சிவம் துபே ஆட்டம் இழந்தவுடன் நடுவர்கள் பந்தை மாற்றி இருக்கிறார்கள். இதற்கு அஸ்வின் களத்திலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பந்து வீசும் அணி கேப்டனிடம் கேட்காமல் எப்படி நடுவர்கள் பந்தை மாற்றலாம் என நடுவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பந்து சரியாக இல்லை என நாங்கள் நினைத்தால் அதனை மாற்றுவதற்கு அதிகாரம் இருக்கிறது என்று நடுவர்கள் பதில் அளித்துள்ளனர். இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் அஸ்வின் வழக்கம்போல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் நடுவர்கள் செயல்படும் விதம் தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் யாரிடமும் கேட்காமல் பந்தை எப்படி மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அஸ்வின் கேட்டுள்ளார். மேலும் நடுவர்களின் செயல்பாடு குறித்தும் அஸ்வின் விமர்சித்துள்ளார். இந்த பேட்டி ஐபிஎல் விதிமுறைகளுக்கு எதிரானது என்ற காரணத்தினால் அஸ்வினின் ஊதியத்திலிருந்து 25% அபராதமாக பிடித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் விதியின்படி பந்து சரியாக இல்லை என்றால் அதனை மாற்றும் அதிகாரம் நடுவருக்கு இருக்கிறது. இதனால் தான் நடுவர்கள் சிஎஸ்கே அணி விளையாடும்போது பந்தை மாற்றி இருக்கிறார்கள். ஆனால் அதனை அஸ்வின் விமர்சித்தது தவறாக பார்க்கப்படுகிறது. எப்போதும் போட்டி குறித்து வீடியோவை அஸ்வின் வெளியிட்டு தற்போது பிசிசிஐ இடம் நன்றாக வாங்கிக் கொண்டிருக்கிறார்.