மும்பை : இந்திய கிரிக்கெட் அணிக்கு இனி வீரர்கள் தேர்வு செய்ய புதிய நடைமுறையை பயன்படுத்த வேண்டும் என அஸ்வின் அறிவுறுத்தி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பான இந்திய அணியில் வெறும் 15 வீரர்கள் மட்டும்தான் தேர்வு செய்ய முடியும்.
இதன் காரணமாக சஞ்சு சாம்சன், கருண் நாயர், ருதுராஜ் போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இடம்பெற முடியவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், இனி வீரர்களை தேர்வு செய்ய எந்த முறையை கையாள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பேசிய அவர், "முதலில் தேர்வு குழு தலைவராக இருக்க நான் விரும்பவில்லை. இந்திய அணி தொடர்பாக எந்த ஒரு முடிவு எடுக்கக்கூடிய பொறுப்புக்கும் நான் வரமாட்டேன். ஏனென்றால் அது மிகவும் கடினமான பணி உதாரணத்திற்கு ஜெய்ஸ்வாலை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் நன்றாக விளையாடி வருகிறார்".
"ஜெய்ஸ்வால் உடனடியாக டி20 கிரிக்கெட் வரவேண்டும். அவர் உலகக்கோப்பை அணியில் இருந்தார். என்னைக் கேட்டால் அவர்தான் தொடக்க வீரராக இருந்திருக்க வேண்டும். ஆனால் கில், ருதுராஜ், ஆகியோரும் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடுகிறார்கள். இதன் காரணமாக யாரை தேர்வு செய்வது என்பதில் தேர்வு குழுவினருக்கு பெரிய தலைவலியாக இருக்கின்றது".
"இதனால் இனி வெறும் ரன்களை மட்டும் பார்க்காமல் நெருக்கடியான தருணத்தில் ஒரு வீரர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்த்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் தற்போது நவீன கால கிரிக்கெட்டில் திறமை வாய்ந்த வீரர்கள் பலரும் இருக்கிறார்கள். எனவே ரன்கள் குவிப்பவர்களை மட்டும் பார்க்காமல் கடினமான சூழ்நிலையில் யார் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்த்து அணியை தேர்வு செய்ய வேண்டும்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.