துபாய்: தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு ஒரு மாபெரும் அதிர்ச்சி செய்தி வந்திருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு அஸ்வின் வாங்கப்பட்டிருந்தார். எனினும் அந்த தொடரில் ஒன்பது போட்டிகளில் மட்டுமே விளையாடிய அஸ்வின் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்தாத நிலையில் திடீரென்று ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய நிலையில், ஐபிஎல் போட்டிக்கும் முடிவுரை எழுதிய அவர் இனி வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீப் போட்டிகளில் விளையாட போகிறேன் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் துபாயில் நடைபெறும் சர்வதேச லீக் 20 எனப்படும் ஐஎல்டி 20 தொடரில் விளையாட அஸ்வின் ஆர்வம் காட்டினார். தனது அடிப்படை விலையை ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் என அஸ்வின் நிர்ணயித்திருந்தார். இது அந்த தொடரில் உள்ள ஒரு வீரருக்கு தரப்படும் அதிகப்படியான விலையாகும்.
இந்த நிலையில் இன்று துபாயில் நடைபெற்ற ஏலத்தில் 73 இடங்களை நிரப்புவதற்கான ஏலத்தில் அஸ்வின், ஷகிபுல் ஹசன், முகமது நபி, பெவுமா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் அஸ்வின் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை வாங்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை. இதனை அடுத்து அஸ்வின் விலை போகவில்லை.
ஒரு வேலை அஸ்வின் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தால் நடப்பு தொடரில் தினேஷ் கார்த்திக் பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருப்பார். அஸ்வினை ஐஎல்டி 20 தொடரில் தேர்வு செய்யப்படாததற்கு, அவருடைய அடிப்படை விலை மிகவும் அதிகம் என்பது தான் காரணம்.
எனினும் அஸ்வின் வரும் நவம்பர் மாதம் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் விளையாடுகிறார். அதன்பின் பிக் பாஸ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்கு ஏற்கனவே ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்திய அணிக்காக 65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 72 விக்கெட்டுகளையும், ஐபிஎல் தொடரில் 221 போட்டியில் விளையாடி 187 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.