சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டிகளில் பங்கேற்க தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு ஒரு மெல்லிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அக்சர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ள ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தமிழக வீரர் அஸ்வின் விளையாடுகிறார். இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் 21 மாதங்களுக்குப் பிறகு அஸ்வின் இந்திய ஒரு நாள் அணியில் விளையாட உள்ளார். இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் அஸ்வின் தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.
எஸ் எஸ் என் கல்லூரியில் நடைபெறும் வி ஏ பி கோப்பை தொடரில் அஸ்வின் விளையாடினார். இதில் எம் ஆர் சி ஏ அணியின் சார்பாக அஸ்வின் விளையாடினார். யங் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் எம் ஆர் சி ஏ அணி 38 ஓவர் முடிவில் 192 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது தமிழக வீரர் அஸ்வின் பேட்டிங் செய்ய வந்தார்.
கடைசி 12 ஓவரில் அஸ்வின் என்ன செய்யப் போகிறார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஏனெனில் அஸ்வினின் பேட்டிங் திறமைக்காக தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.இந்த போட்டியில் அஸ்வின் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் துரதிஷ்டவசமாக மோசமான ரன் அவுட் ஒன்றில் சிக்கி ஆட்டம் இழந்தார்.
17 பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. எனினும் அஸ்வின் ரன் அவுட் ஆனாலும் பந்துவீச்சிலும் பில்டிங்களும் அவர் எப்படி செயல்பட போகிறார் என்பதை பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள். மிகப்பெரிய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் ரஞ்சிக்கோப்பையிலே தற்போது விளையாடாமல் சீன் போடும் நிலையில் அஸ்வின் சாதாரண உள்ளூர் போட்டியில் கூட விளையாடி உலகக்கோப்பைக்காக பயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.