சென்னை : இந்திய கிரிக்கெட் அணியில் நடு வரிசையில் அனுபவம் இல்லாத வீரர்கள் இருப்பதால் விராட் கோலி நம்பர் நான்காம் இடத்தில் இறங்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அஸ்வின் வெளியிட்டுள்ள பேட்டியில் பல முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி உட்பட விராட் கோலி பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால் ரோகித் சர்மா இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார் என்று தெரிகிறது. மேலும் விராட் கோலி நம்பர் மூன்றாவது இடத்தில் தான் விளையாடப் போகிறார். ரோகித் சர்மா, கில், கோலி ஆகியோர் நமது தொடக்க வீரர்கள் மட்டுமல்ல. ஒரு நாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மேட்ச் வின்னர்களாக திகழ்கிறார்கள். எனவே இந்த மாற்றத்தை செய்யக்கூடாது. திலக் வர்மா திறமையான வீரராக திகழ்கிறார். அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது.
மேலும் முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நினைப்பை அவர் வெளிப்படுத்துகிறார். திலக் வர்மா மூலம் இந்திய அணியில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் நமது அணியின் மிகவும் முக்கியமான வீரராக திகழ்கிறார். சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய இந்திய வீரர்களில் அவரும் ஒருவர்.
மேலும் பேட்டிங் வரிசையில் நம்பர் நாலாவது இடத்தில் தொடர்ந்து நன்றாக அவர் விளையாடி இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் தனது உடல் தகுதியை நிரூபித்து விட்டால் அவர் இந்தியாவுக்காக நான்காவது இடத்தில் விளையாட வேண்டுமா என்ற விவாதமே ஏற்படக்கூடாது என்று தமிழக வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.
இதன் மூலம் பேட்டிங் வரிசையில் நம்பர் மூன்றாவதாக விராட் கோலியும், நான்காவதாக ஸ்ரேயாஸ் ஐயரும், ஐந்தாவதாக கேஎல் ராகுலும் ஆறாவதாக ஹர்திக் பாண்டியாவும் ஏழாவதாக சூரியகுமார் யாதவும் இடம்பெற வேண்டும் என்பதை அஸ்வின் தனது பேட்டி மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.