திருவட்டாறு: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் அண்மையில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் அஸ்வின் பெரிய அளவு சாதிக்கவில்லை. இந்த நிலையில் டிஎன்பிஎல் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அஸ்வின் இளம் வீரர்களை வழி நடத்தி விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் அருவி கரையில் அஸ்வின் சக அணி வீரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து குளியல் போட்டதுதான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. திருவட்டாறு என்ற இடத்தில் அருவிக்கரையில் பரளி ஆறு அமைந்துள்ளது.
இந்த ஆற்றின் நடுவே பாறை கூட்டத்தில் தண்ணீர் பாய்ந்து ஓடும்.

இந்த இடத்தில் பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.இதனால் இந்த இடம் மக்களிடையே பிரபலமானது ஆகும். ஆனால் இங்கு குளிக்க செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதால் இந்த இடத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் இந்த தடையை மீறி தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது நண்பர்களுடன் குளிக்க வந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அஸ்வின் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அஸ்வின் குளிக்க சென்றதை பார்த்து அந்த இடத்தில் தற்போது பல சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
உள்ளூர் மக்கள் பலரும் எச்சரிக்கை விட்டும், அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கு உடனடியாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் பேச்சுப் பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருக்கிறது.
இதனால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன் போலீசார் கண்காணிப்பை இந்த இடத்தில் தீவிர படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அஸ்வினை பார்த்து தான் பலரும் இந்த இடத்திற்கு வந்திருப்பதால் தடையை மீறி அங்கு சென்றது ஏன் என்பது குறித்து அஸ்வின் இடம் போலீசார் விசாரணை நடத்துவார்களா என்று கேள்வியும் எழுந்துள்ளது.