சென்னை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் தற்போது மீண்டும் இந்திய அணிக்காக கடைசி ஒரு முறை விளையாட முடிவெடுத்திருப்பதாக அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் தொடரில் பாதியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
அதன் பிறகு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின் ஒன்பது போட்டிகளில், 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதை அடுத்து அஸ்வின் ஐபிஎல் போட்டிகள் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டுவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.இந்த நிலையில் இந்திய அணிக்காக கடைசி ஒரு முறை விளையாட முடிவெடுத்திருப்பதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.அது என்ன தொடர் என்று தற்போது பார்க்கலாம்.
வரும் நவம்பர் மாதம் ஏழாம் தேதியிலிருந்து ஒன்பதாம் தேதி வரை ஹாங்காங் இல் நடைபெறும் ஹாங்காங் சிக்ஸர் என்ற தொடரில் தான் அஸ்வின் இந்திய அணிக்காக விளையாட முடிவெடுத்துள்ளார். 6 ஓவர்கள் கொண்ட போட்டியான இது ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. தற்போது இந்த தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின்,"நாம் சிறுவயதில் ஹாங்காங் சிக்ஸர் தொடரை தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். அந்த தொடர் எப்போதுமே எனக்கு ஆர்வத்தை தந்திருக்கின்றது. இந்த தொடரில் இடம்பெற வேண்டும் என்று நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றேன்."
"இந்த தொடர் புது வகையான யுக்திகளை கையாள வாய்ப்பை தரும். அது மட்டுமில்லாமல் கடும் நெருக்கடியில் நமது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த தொடரில் எனது முன்னாள் வீரர்களுடன் இணைந்து விளையாட மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றேன். அது மட்டுமில்லாமல் இந்த தொடரில் பல திறமை வாய்ந்த எதிரணிகள் உள்ளன. எனவே இந்த தொடர் நிச்சயம் எங்களுக்கு கடும் சவால்களை கொடுக்கும்" என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹாங்காங் கிரிக்கெட் அணியின் தலைவர் குர்ஜ், "அஸ்வின் இந்த தொடரில் பங்கேற்க ஒப்புதல் அளித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றது. நாங்கள் அஸ்வினை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம். அஸ்வினின் வருகை மூலம் இந்திய அணியின் பலம் அதிகமாகி இருக்கிறது."
"அஸ்வின் போன்ற அறிவார்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறுவதன் மூலம் நிச்சயம் இந்த தொடர் வேறு ஒரு கட்டத்திற்கு செல்லும். இந்த தொடர் பொழுதுபோக்குக்காகவும் திறமைகளை வெளிக்காட்டுவதற்காகவும் புதுமைக்காகவும் நடத்தப்படுகிறது இந்த அனைத்து தகுதிகளும் அஸ்வினுக்கு இருக்கிறது. எனவே இந்த போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.