மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கிய அஸ்வின் கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும் ஐபிஎல், டிஎன்பிஎல் உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வந்த அஸ்வின் திடீரென்று ஐபிஎல் தொடரிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் உலகில் நடைபெறும் மற்ற டி20 தொடர்களில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் வேறு எந்த நாட்டிலும் நடைபெறும் தொடரில் பங்கேற்க முடியாது. தற்போது ஐ பி எல் இருந்தும் அஸ்வின் ஓய்வு பெற்றிருப்பதால், இந்த தடை அவருக்கு பொருந்தாது.

இந்த தருணத்தில் அஸ்வின் அடுத்ததாக எந்த கிரிக்கட் தொடரில் பங்கேற்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தி 100 தொடரில் பங்கேற்க அஸ்வின் ஆர்வமாக இருக்கிறார். தி 100 தொடரில் பல ஐபிஎல் அணிகள் முதலீடு செய்து அணிகளை வாங்கி இருக்கிறது.
இந்த தருணத்தில் இந்த 100 தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற பெயரை பெறுவதற்கு அஸ்வின் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ 20 தொடரிலும் அஸ்வின் விளையாட இருக்கின்றார். அந்த தொடரிலும் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியோர் தங்களது அணிகளை வாங்கி இருக்கிறது.
இதனால் அஸ்வின் சிஎஸ்கே நிர்வாகத்தில் தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடுவாரா? இல்லை ராஜஸ்தான் நிர்வாகத்தின் கீழ் எஸ்ஏ 20 தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வியும் இருந்துள்ளது. இதேபோன்று அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் லீக் தொடரிலும் பங்கேற்க வாய்ப்பு இருக்கின்றது.
அதுமட்டுமில்லாமல் வெஸ்ட் இண்டீஸ் நடைபெறும் கேரிபியன் தொடரிலும் அஸ்வின் பங்கு பெறலாம். இதுவரை 333 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் மொத்தமாக 317 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார். வரும் செப்டம்பர் மாதம் வந்தால் அஸ்வின் 38 வயதை நிறைவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.