இரட்டை சதம் விளாசி ருத்துராஜ் கலக்கல்.. இந்திய அணியில் இடம் கிடைக்காது - அஸ்வின் சொன்ன பகீர் காரணம்
சென்னை : ஐபிஎல் தொடர் மூலம், ரசிகர்களின் நம்பிக்கையை பெற்ற ருத்துராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து 4 சதங்கள் விளாசிய ருத்துராஜ் கெய்க்வாட்க்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.
ஆனால், போதிய அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் ருத்துராஜ் கெய்க்வாட் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் மீண்டும் உள்ளூர் போட்டியில் கலக்கிய ருத்துராஜ் கெய்க்வாட், டி20 தொடரான சையது முஸ்தாக் அலி தொடரில் ஆறு இன்னிங்ஸில் 295 ரன்கள் குவித்தார்.

660 ரன்கள்
இதனைத் தொடர்ந்து 50 ஓவர் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில, 220 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். அந்த ஆட்டத்தின் 49வது ஓவரில் சிவ் சிங் வீசிய ஒரே ஓவரில் 7 சிக்சர் விளாசி ருத்துராஜ் கெய்க்வாட் மற்றொரு சாதனையை படைத்தார். அந்த தொடரில் மேலும் விளையாடிய ஐந்து இன்னிங்ஸில் 4 சதம் என மொத்தமாக 660 ரன்கள் விளாசினார்.

வாய்ப்பு கிடைக்காது
இந்த நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட் எவ்வளவு தான் ரன்கள் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ருத்துராஜ் கெய்க்வாட் சமீப காலமாக ரன்களை குவித்து வருகிறார். ஆனால் அவர் இந்தியாவில் பிறந்துவிட்டார். இந்திய கிரிக்கெட் அணியில் யாருக்கு பதிலாக சேர்க்கப்படுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள். இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கடினமாக காலமாக மாறிவிட்டது.

நெருக்கடி
காரணம், ஒரு இடத்திற்கு பல வீரர்கள் போட்டி போடும் நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது தொடக்க வீரர் இடத்திற்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ,சுப்மான் கில் ஆகியோருடன் ருத்துராஜ் கெய்க்வாட் போட்டி போடும் நிலை உருவாகி உள்ளது. .இதில் ரிஷப் பண்ட் வேறு தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பை தேடி வருகிறார். ருத்துராஜ் கெய்க்வாட் தன்னுடைய ஆட்டத்தால் இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. ஜாலிக்காக ருத்துராஜ் கெய்க்வாட் ரன் அடித்து அசத்தி வருகிறார்.

சிஎஸ்கே மகிழ்ச்சி
ருத்துராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம், யாருக்கு மகிழ்ச்சியை தருகிறதோ இல்லையோ, சிஎஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கும். சர்வதேச கிரிக்கெட்டிலும், ருத்துராஜ் கெய்க்வாட் தனது ஆதிக்கத்தை செலுத்துவார், அதற்கான காலம் வெகு தூரத்தில இல்லை. இந்திய அணியில் ஏற்கனவே தொடக்க வீரருக்கான இடத்திறகு ஷிகர் தவான், ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சுப்மான் கில், ரிஷப் பண்ட், இஷான் கிஷன் ஆகியோர் உள்ளனர். இதனால் ருத்துராஜ் கெய்க்வாட் வெறும் பேட்டிங் மட்டும் கவனம் செலுத்தாமல் பந்துவீச்சிலும் கவனம் செலுத்தினால் அவருக்கு அணியில் முன்னுரிமை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications