மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளையாட ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஸ்வின் திரும்பி இருக்கிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு சீசன் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடி உலகப் புகழ் பெற்றார். எப்போதுமே கடந்த காலங்களில் பெரிய அளவில் சாதிக்காத வீரர்கள் சென்னை அணிக்கு வந்தால் மட்டும் அபாரமாக விளையாட தொடங்குவார்கள்.

இதற்கு காரணம் தோனி வீரர்களை கையாளும் விதம்தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது. எனினும் தோனி அப்படி என்ன சொல்லி வீரர்களிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை பெறுவார் என்பது குறித்து தற்போது அஸ்வின் கூறி இருக்கிறார். இது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய அஸ்வின்,தோனி எவ்வளவு சாதாரண வீரராக இருந்தாலும் அவர்களிடமிருந்து சிறந்த செயல்பாட்டை வாங்கி விடுவார்.
உதாரணத்திற்கு துஷார் தேஷ்பாண்டே போன்ற வீரர் எல்லாம் சிஎஸ்கேவுக்கு வந்தவுடன் சிறப்பாக செயல்பட தொடங்கினார்கள். இதற்கு முக்கிய காரணம் தோனி பௌலர்களை கையாளும் விதம்தான். நான் கடந்த சீசன்கள் எல்லாம் சிஎஸ்கேவில் இல்லை என்றாலும் அவர் துஷார் தேஷ் பாண்டேவிடம் என்ன சொல்லி இருப்பார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
தோனி பவுலர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக செயல்பட மாட்டார். உதாரணத்திற்கு மைதானத்தின் பெரிய பவுண்டரி இருக்கும் இடம் பார்த்து பேட்ஸ்மேன்களை அடிக்க வை. கடந்த போட்டியில் நீ கொடுத்த ரன்னை விட, எனக்கு இரண்டு ரன்கள் நீ குறைவாக கொடுத்தாலே போதும் என்று தோனி கூறி இருப்பார்.இதன் மூலம் பௌலர்களுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது.
அது மட்டுமல்லாமல் கடந்த போட்டியை விட நாம் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் பவுலர்களுக்கு ஏற்படும்.இது மற்ற அணியினர் என்றால் ஒரு பவுலரை அழைத்து நீ இந்த வீரருக்கு இப்படி பந்து வீசி விக்கெட்டை வீழ்த்து என்று கூறுவார்கள். இது பவுலர்களுக்கு தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்தும். ஆனால் தோனி எனக்கு இரண்டு ரன்கள் குறைவாக கொடுத்தால் போதும் என்று தான் சொல்லுவார்.
இதனால்தான் சிஎஸ்கேவுக்கு வரும் சாதாரண பவுலர் கூட அபாரமாக செயல்படுகிறார் என்று அஸ்வின் கூறியுள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருவது குறித்து ஏற்கனவே அஸ்வின் பேசிய வீடியோவில், உங்களிடம் திறமை இருந்தால் மட்டுமே தோனி உங்களுக்கு வாய்ப்பு தருவார். நீங்கள் ஓடுகின்ற குதிரை என தோனிக்கு தெரிந்து விட்டால், நீங்களே போதும் என்னை விட்டு விடு என்று சொல்லும் அளவுக்கு தோனி, உங்களுக்கு வாய்ப்பு கொடுத்து முன்னேற்றுவார் என்று கூறியிருந்தார்.