நீச்சல் குளம்
அதில் அஸ்வின் பேசியது பின்வருமாறு, இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அந்த நிலையில் வங்கதேசத்திற்கு தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. அப்போது மூன்றாவது நாள் முடிவில் நான் ஹோட்டலுக்கு சென்றேன். அப்போது நீச்சல் குளத்தில் வங்கதேச வீரர்கள் மெஹதி ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
கிண்டல் செய்தார்கள்
என்னை பெங்கால் மொழியில் ஏதோ பேசி கிண்டல் செய்வார்கள் என நான் நினைத்தேன்.
ஆனால் இருவரும் என்னை வரவேற்றார்கள். அப்போது நீங்கள் ஏன் நைட் வாட்ச்மேன் ஆக வரவில்லை. நாங்கள் உங்களை எதிர்பார்த்தோம் என்று கேட்டார்கள். எப்படி இருந்தாலும் நீங்கள் நாளைக்கு பேட்டிங் செய்ய வந்தாக வேண்டும் உங்களுடைய விக்கெட் மிகவும் முக்கியம் என்று கூறி கிண்டல் செய்யும் தோணியில் பேசினார்கள்.
கொஞ்சம் பொறுங்க ப்ரோ
அதற்கு நான் உங்களுடைய வரலாற்று சிறந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று கூறினேன். அதற்கு அப்படி எல்லாம் அல்ல உங்கள் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. எங்களுக்கு வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைக்காது என்று பதிலளித்தார்கள். எனினும் கடைசி இன்னிங்சில் இலக்கு எட்டுவது உங்களுக்கும் கடினம் என்று வங்கதேச வீரர்கள் கூறினார்கள். அதற்கு கொஞ்சம் பொறுங்க ப்ரோ, 35 ஓவர் முடிந்த பிறகு பந்தின் நிலை மாறும். அப்போது பேட்ஸ்மேன்கள் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்களிடம் தாம் கூறியதாக அஸ்வின் தனது வீடியோவில் குறிப்பிட்டார்.
ஏமாற்றம்
இதனை தொடர்ந்து லிட்டன் தாஸை பார்த்து பாராட்டியதாக அஸ்வின் கூறினார் .மேலும் லிட்டன் தாஸ் மீது தமக்கு சிறிய ஏமாற்றம் இருப்பதாக குறிப்பிட்ட அஸ்வின் இது தொடர்பாக நான் அவரிடமே பேசினேன். நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது விராட் கோலி ,ஜோ ரூட், வில்லியம்சன் வரிசையில் இடம் பெறுவீர்கள் என்று நினைத்தேன். அதில் எனக்கு ஏமாற்றம் தான் என்று கூறினேன். இதற்கு லிட்டன் தாஸ் உங்களுடைய கருத்து சரிதான். எங்களுடைய கிரிக்கெட் கலாச்சாரம் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறது.
லிட்டன் தாஸ் கவலை
எங்களுக்கு பெரிய அளவிலான வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து வங்கதேசத்தில் விளையாடுகிறோம். புதிய ஆடுகளத்தில் விளையாடும் போது எங்களை மாற்றிக் கொள்ள நேரம் எடுக்கிறது என்று லிட்டன் தாஸ் கூறினார். அதற்கு நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏதேனும் சாதித்தால் அதனை பார்த்து சந்தோஷப்படும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் என்று கூறியதாக அஸ்வின் குறிப்பிட்டார். வங்கதேச வீரர்களுடன் நடைபெற்ற உரையாடல் தான் அஸ்வின் பேட்டிங்கில் கவனம் செலுத்தி வெற்றியை தேடி தர உதவியாக அமைந்திருப்பது தற்போது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.