பவுலர்களை இப்படிப் போட்டு அடிச்சா எப்படிப்பா... அதுக்கு அஸ்வின் கொடுத்த ஐடியா இது #rashwin
டெல்லி: இங்கிலாந்து அணி சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் அதி பயங்கரமாக பேட் செய்து உலக சாதனை படைத்தது. நேற்று டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அடித்து துவம்சம் செய்து புதிய உலக சாதனை படைத்தது. இதையடுத்து பவுலர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை வைத்து டிவிட்டரிலும் பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் இடையே சுவாரஸ்யமான விவாதம் நடந்தேறியது.
டி20 கிரிக்கெட்டில் பவுலர்களை விட பேட்ஸ்மேன்கள் ஆதிக்கமே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை அவ்வப்போது பேட்ஸ்மேன்கள் நிரூபித்துக் கொண்டே உள்ளனர். இதைத்தான் சமீபத்திய ஆஸ்திரேலிய சாதனையும் எடுத்துக் காட்டியுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 3 விக்கெ்ட இழப்புக்கு 263 ரன்களைக் குவித்து புதிய உலக சாதனையைப் படைத்தது. இதில் மேக்ஸ்மெல் அதிரடியாக ஆடி 145 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா வெற்றி
மிகப் பெரிய ஸ்கோரை எட்டி முடித்த ஆஸ்திரேலியா பின்னர் தனது பந்து வீச்சு மூலம் இலங்கை அணியை சுருட்டி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. இதன் மூலம் முதல் டி20 போட்டியை மிகப் பெரிய சாதனைப் போட்டியாக மாற்றி விட்டது ஆஸ்திரேலியா.

ஐபிஎல் சாதனை
சர்வதேச டி20 போட்டி ஒன்றில் இதுபோல அதிக ரன்கள் குவிப்பது அதாவது 263 ரன்களைக் குவிப்பது இது உண்மையில் 2வது முறையாகும். இதற்கு முன்பு, 2013 ஐபிஎல் தொடரில், பெங்களூருவில் நடந்த போட்டியில் புனே வாரியர்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களைக் குவித்து அசத்தியது நினைவிருக்கலாம்.

175 ரன்களைச் சாத்திய கெயில்!
அப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி புயல் போல விளையாடிய கெய்லை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அப்போட்டியில் கெய்ல் அதிரடியாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175 ரன்களைக் குவித்தார் என்பது நினைவிருக்கலாம்.

பவுலர்கள் பாவம்
ஆஸ்திரேலிய சாதனைப் போட்டியைத் தொடர்ந்து டி20 போட்டிகளில் இப்படி தொடர்ந்து பவுலர்கள் உதைபடுகிறார்களே என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது. அதில் ஹர்ஷா போக்ளேவின் டிவிட்டும் ஒன்று.

அடப்பாவமே
இதுகுறித்து போக்ளே போட்ட டிவிட்டில், 10 ஓவர்களில் 153 ரன்களா, 39 பந்துகளில் செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பா, மேக்ஸ்வெல் 145 ரன்களா, மொத்தத்தில் 263. அடுத்து என்ன.. பவுலர்கள் யாராவது இருக்கீங்களா பதில் சொல்லுங்க என்று கேட்டுள்ளார் போக்ளே.

இப்படிப் பண்ணலாம் பாஸு!
அதற்கு அஸ்வின் ஒரு ஜாலி பதிலைப் போட்டுள்ளார். அது டென்னிஸ் பால் தீர்வு. பவுலிங் பவர் பிளேயில் வரும் 4 ஓவர்களில் 2 ஓவர்களில் டென்னிஸ் பாலைப் போட்டு பந்து வீசலாம். மீதமுள்ள 2 ஓவர்களுக்கு பவுலிங் மெஷினைப் பயன்படுத்தலாம் என்று கூற படு கலகலப்பாகி விட்டது போக்ளே போட்ட "கூக்ளி"!.

ஆஹான்
அதற்கு போக்ளே பதிலளிக்கையில் வர வர ஷேவாக் மாதிரியே பன்ச் லைனாகப் பேசுகிறார் அஸ்வின். கிரிக்கெட் திறமையும், டிவிட்டர் திறமையும் சேர்ந்து விட்டன என்று கூறியுள்ளார் போக்ளே.


Click it and Unblock the Notifications