சென்னை: ரோகித் ஷர்மா, பும்ரா ஆகியோருக்கு பிறகு இந்திய அணியில் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு ஆளே கிடையாது என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்திருக்கிறார். ரோகித் சர்மா தற்போது தன்னுடைய கடைசி கிரிக்கெட் அத்தியாயத்தில் இருக்கிறார்.
டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே பும்ரா அடுத்த கேப்டனாக தயார்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவருக்கும் அடிக்கடி காயம் ஏற்படுவதால் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ இருக்கிறது.

இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின்,"நான் ஒரு விஷயத்தை வெளிப்படையாக இங்கு பேச விரும்புகிறேன். ரோகித் சர்மாவுக்கு ஒரு வேளை காயம் ஏற்பட்டு விட்டால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டனாக கில் தான் செயல்பட வேண்டும்".
"ரோகித் இந்த இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. கில்லை பொருத்தவரை, அவர் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். கேப்டனாக அவர் மிகவும் இளம் வீரர். அண்டர் 19 உலக கோப்பையில் கூட பிரித்வி ஷா தான் கேப்டனாக இருந்தார், கில் செயல்படவில்லை. எனவே கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்".
"ஆனால் இது நல்ல முடிவா என்று கேட்டால் நிச்சயம் இது விவாதத்திற்குரியது தான். ஆனால் மோசமான முடிவு என்று சொல்ல மாட்டேன். நான் பலமுறை இந்திய அணியில் பார்த்திருக்கிறேன். நமது இந்திய அணியில் கேப்டன் பொறுப்புக்கு சரியான ஆளே கிடையாது. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் இல்லை என்றால் இந்திய அணியில் கேப்டன் என்ற இடம் காலியாக இருக்கின்றது".
"ஒரு கேப்டன் இருக்கும்போதே அடுத்த கேப்டன் வளர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ரோகித் சர்மா இருக்கும்போதே கில் துணை கேப்டனாக இருப்பது அவருக்கு நிச்சயம் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தருணம் தான். இதுபோன்று பண்ட் போன்றவரும் கேப்டனாக வர தகுதி இருக்கின்றது. கில் கேப்டனாக வருவதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் இந்திய அணியில் நடக்கும் விஷயங்களை எல்லாம் நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. எனவே கில் முயற்சி செய்து பார்க்கட்டும்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.