மும்பை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவில் அஸ்வின் இந்த ஓய்வு முடிவை அறிவித்து அன்றைய தினமே தாயகம் புறப்பட்டு வந்தார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் அஸ்வின், ஒட்டுமொட்ட சர்வதேச கிரிக்கெட்டிலும் 765 விக்கெட் வீழ்த்திருக்கிறார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் படைத்திருக்கிறார்.

சென்னையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஸ்வின், இவ்வளவு பெரிய உச்சத்தை தொடுவோம் என்று அஸ்வினே நம்பி இருக்க மாட்டார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் அஸ்வின் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய மொபைல் போனில் வந்திருக்கும் மெசேஜ்களை அஸ்வின் பதிவிட்டு இருக்கிறார். அதில் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் அஸ்வினை வாழ்த்தி இருக்கிறார்கள்.
இதனை உருக்கத்துடன் பதிவிட்டுள்ள அஸ்வின் 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் யாராவது நீ ஸ்மார்ட்போன் வைத்திருப்பாய், அதில் உன்னுடைய கடைசி கிரிக்கெட் நாள் அன்று உன்னுடைய செல்போனுக்கு இவர்களெல்லாம் அழைத்திருப்பார்கள் என்று முன்பே யாராவது சொல்லி இருந்தால் எனக்கு நெஞ்சுவலியே வந்திருக்கும்.
மிக்க நன்றி சச்சின் மற்றும் கபில்தேவ் என்று அஸ்வின் நன்றி தெரிவித்துள்ளார். அஸ்வினின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது கடுமையாக உழைத்து திறமையை வளர்த்துக் கொண்டு சரியான பாதையில் சென்றால் அஸ்வின் போல் நாமும் சாதிக்கலாம் . சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.