சென்னை : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கைக்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தற்போது குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது தலைவராக இருந்த நஜிம் சேதி அந்தப் பதவியில் இருந்து விலகி விட்டார். இதனை அடுத்து புதிய தலைவராக அஷ்ரப் பதவியேற்று உள்ளார்.

இந்த நிலையில் ஆசிய கோப்பையை பாகிஸ்தானைத் தவிர வேறு எந்த நாட்டிலும் நடத்த மாட்டோம் என்று முதலில் பேட்டி அளித்த அஷ்ரப், பிறகு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து பின் வாங்கினார். இதேபோன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தை சென்னையில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. இதற்கு காரணம் ஆப்கானிஸ்தானில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அவர்களை சென்னையில் எதிர்கொள்வது முடியாத காரியம் என்றும் கூறியுள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தானை சந்திக்கும் போட்டியை பெங்களூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. இதற்கு தான் அஸ்வின் தற்போது கண்டனம் தெரிவித்து இருக்கிறார். சுழற் பந்துவீச்சாளர்களை எங்களால் சமாளிக்க முடியாது என்று கூறி ஆடுகளத்தை மாற்ற சொல்வதெல்லாம் கடவுளுக்கே அடுக்காது. பாதுகாப்பு காரணங்கள் சரியில்லை என்று கூறி போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றலாம்.
ஏற்கனவே 2016 டி20 உலக கோப்பை தொடரின் போது இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டம் ஒன்று தர்மசாலாவில் நடைபெற இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கொல்கத்தாவில் நடத்தப்பட்டது. இப்படி ஏதேனும் நியாயமான காரணம் இருந்தால் ஐசிசி கருத்தில் எடுத்துக் கொள்ளும்.
ஆனால் மைதானம் எங்களுக்கு சாதகமானது இல்லை என்று கூறி ஆடுகளத்தை மாற்றுவது எல்லாம் ஐசிசி நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். பாகிஸ்தான் அட்டவணைப்படி சென்னையில் தான் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள வேண்டும் என்று அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அவர்களுடைய பேட்ஸ்மேன் கேவலப்படுத்துவது போல் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.