லாகூர்: நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்ற போது முகத்தில் பந்து தாக்கி பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என்ற விமர்சனம் எழுந்தது.
அந்தப் போட்டி நடந்த லாகூர் கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் மின் வெளிச்சம் போதிய அளவுக்கு இல்லாததால் ரச்சின் ரவீந்திரா கேட்ச் பிடிக்கும் போது பந்து அவரது முகத்தில் தாக்கியதாக பலரும் விமர்சித்து இருந்தனர். அதிக மின் விளக்குகள் இல்லாததாலேயே இந்த விபத்து நடந்ததாக கூறினர்.

இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதை மறுத்து இருக்கிறார். ரச்சின் ரவீந்திரா சரியாக பந்து வரும் இடத்தை கணிக்கத் தவறியதாலேயே அவருக்கு இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது அல்லது அவரது கால் தடுமாறி நடந்திருக்கலாம் எனவும் கூறி இருக்கிறார்.
இது பற்றி சல்மான் பட் பேசுகையில், "மக்களுக்கு சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமில்லாத போது அதை புரிய வைப்பதில் அர்த்தம் இல்லை. இது தேவையற்ற ஒரு விமர்சனம். லாகூர் மைதானத்தில் உள்ள மின்விளக்குகள் புதியவை. அவை நன்றாகவே உள்ளன."
"நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்த போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்துகளில் சிக்ஸர் அடித்தனர். அப்போதும் மின் விளக்குகள் சரியாக வேலை செய்யவில்லையா? ஒரு ஃபீல்டர் 70 மீட்டர் தொலைவில் நின்று ஃபீல்டிங் செய்யும்போது கேட்ச் பிடிக்க முடியவில்லை என்றால் அது அவரது தவறான கணிப்புதான். அவர் நல்ல ஃபீல்டர்தான். ஒருவேளை அவரது கால் தடுமாறி இருக்கலாம். அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம்" என்றார் சல்மான் பட்.
PAK vs NZ: சுருண்டு விழுந்த ரச்சின்.. பாகிஸ்தான் செய்த தவறான வேலை.. கொந்தளித்த ரசிகர்கள்
இந்தப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா முகத்தில் காயம் ஏற்பட்டதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாடவில்லை. அடுத்து அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் சல்மான் பட் ரச்சின் சரியாக கேட்ச் பிடிக்காததால் காயம் ஏற்பட்டதாகக் கூறி இருக்கிறார்.