
இங்கிலாந்து ஆதிக்கம்
முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களையும், ரஹானே 54 பந்துகளை சந்தித்து 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் வெளியேறினார்கள். லோகேஷ் ராகுல் 0, புஜாரா 1, கேப்டன் கோலி 7, பண்ட் 2, ஜடேஜா 4 என்று வெளியேறினார்கள். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், க்ரெய்க் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ஓலே ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது.

பெரும் எதிர்பார்ப்பு
இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல, இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 121 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். எனினும், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறது. லோகேஷ் ராகுல் 8 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரர் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சொதப்பி வந்த புஜாரா, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 180 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதேபோல், கேப்டன் விராட் கோலி 94 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்த பரபரப்பான சூழலில், இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று ஒருநாள் முழுவதும் இந்தியா பேட்டிங் செய்துவிட்டால், வெற்றிப் பெற முடிகிறதோ இல்லையோ நிச்சயம் தோல்வியில் இருந்து தப்பித்துவிடலாம் என்பதால், சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரஹானேவால் தப்பித்த கோலி
ஆனால், புஜாரா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல், ஓலே ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி 91 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு, விராட் கோலியும் இன்று போட்டி தொடங்கியதில் இருந்தே, ஒருவித பயத்துடனும், பதட்டத்துடனுமே விளையாடினார். அவரை பார்ப்பதற்கு எந்நேரமும் அவுட் ஆகும் மனநிலையில் இருப்பது போன்றே இருந்தது. அப்போது தான் 86.3வது ஓவரில் விராட் கோலி 46 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட் கொடுக்கப்பட்டது. ஆண்டர்சனின் வீசிய பந்து கோலி பேட்டை உரசிச் சென்றது போல தெரிந்ததால் அம்பயர் அவுட் கொடுத்தார். உடனே கோலியும் 2 நடக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திரும்பி ரஹானேவிடம் கேட்ச் கொடுத்தது குறித்து கேட்டார். அதற்கு ரஹானே, கேப்டன் கோலியை ரிவ்யூ எடுக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, கடைசி நேரத்தில் விராட் கோலி ரிவ்யூ எடுக்க, பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது. ரிவ்யூவில், கோலியின் பேட் அவரது பேடில் உரசியதால் அந்த சப்தம் கேட்டது தெரிய வந்தது. ரஹானேவின் ஆலோசனை கோலியின் விக்கெட்டை தக்க நேரத்தில் காப்பாற்றியது.

இன்னிங்ஸ் தோல்வி நோக்கி
ஆனால், என்ன பயன்? கோலி அடுத்த சில பந்துகளிலேயே ஓலே ஆண்டர்சன் ஓவரில் 55 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு ரஹானே 10 ரன்களில் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் ஆக, ரிஷப் பண்ட் வெறும் 1 ரன்னில் ராபின்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேற, மொயீன் அலி ஓவரில் முகமது ஷமி 6 ரன்களில் அவுட்டாகியுள்ளார். இந்தியா இன்னிங்ஸ் தோல்விக்கு தயாராகிவிட்டது. இன்று நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்தியா அனைத்து விக்கெட்டுகளை இழந்துவிடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications